I. வகுப்புச் சொற்பொழிவுகள்
அ. ஆரம்பநிலைப் பாடங்கள்
3. குரு
ஒவ்வோர் ஆன்மாவும் பூரணத்துவத்தை எய்த வேண்டும் என்பது நியதி. ஒவ்வோர் உயிரும் கடைசியில் அந்த நிலையை அடைந்தே தீரும். முன்பு இருந்த நிலை அல்லது நினைத்த எண்ணங்களின் விளைவே நாம் இப்போது உள்ள நிலை. எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது, இப்போது நாம் செய்யும் காரியங்களையும், எண்ணும் எண்ணங்களை யும் பொறுத்தது. அதனால் நாம் வெளியிலிருந்து உதவி பெற முடியாது என்பதில்லை. ஆன்மாவின் சாத்தியக்கூறுகள் எப் போதும் புற உதவியினால் விரைவு பெறுகின்றன. எனவே புற உதவி பெரும்பாலோருக்கு ஏறக்குறைய கட்டாயமான தேவை யாக இருக்கிறது. விரைவுபடுத்தும் தூண்டுதல்கள் வெளி யிலிருந்து வருகின்றன. அவை நம்மிடம் மறைந்துள்ள ஆற்றல் களில் செயல்படுகின்றன. அதனால் வளர்ச்சி தொடங்குகிறது; ஆன்மீக வாழ்வு பிறக்கிறது. கடைசியில் மனிதன் புனிதம் அடைகிறான், பூரணத்துவம் எய்துகிறான்.
வெளியிலிருந்து வருகின்ற இந்த விரைவுபடுத்தும் தூண்டு தல் நூல்களிலிருந்து கிடைக்க முடியாது. ஓர் ஆன்மாவிற்கு மற்றோர் ஆன்மாவிலிருந்துதான் தூண்டுதல் கிடைக்கும்; மற்ற எதிலிருந்தும் அல்ல. வாழ்நாள் முழுவதும் நாம் நூல்களைப் படிக்கலாம், பேரறிஞர்களாகத் திகழலாம். ஆனால் நம்மிடம் ஆன்மீகம் என்பதே முளைவிடவில்லை என்பதைக் கடைசி யில் காண்போம். ஒருவனுக்குக் கூர்மையான அறிவு வளர்ச்சி இருந்தால் அதே அளவு ஆன்மீக வளர்ச்சியும் இருக்கும் என்று ஒருபோதும் சொல்ல முடியாது. மாறாக, அறிவு வளரும்போது ஆன்ம வளர்ச்சி தடைப்படுவதையே நாம் காண்கிறோம்.
அறிவை வளர்த்துக் கொள்வதற்கு நாம் நூல்களிலிருந்து உதவி பெறலாம். ஆனால் ஆன்மீக வளர்ச்சிக்கு, நூல்களி லிருந்து அனேகமாக ஒன்றுமே பெற முடியாது. நூல்களைப் படிக்கும்போது, சிலவேளைகளில், நம் ஆன்மீக வளர்ச்சிக்கு ஏதோ உதவி கிடைப்பது போன்றதொரு மனமயக்கம் ஏற்படுகிறது. ஆராய்ந்து பார்த்தால் நம் அறிவுக்கு உதவி கிடைத்ததே தவிர ஆன்மாவிற்கு அல்ல என்பது தெரியவரும். அதனால்தான் கிட்டத்தட்ட நாம் எல்லோருமே ஆன்மீக விஷயங்களைப்பற்றி வெகு அழகாகப் பேச முடிகிறது; நடைமுறை என்று வரும்போது, அதற்கு வேண்டிய தகுதி மிகவும் குறைந்தவர்களாக இருக்கிறோம். நமக்குத் தேவைப்படும் தூண்டுதலை நூல்கள் தர முடியாது என்பதுதான் இதற்குக் காரணம். ஆன்ம வளர்ச்சிக்கான அந்தத் தூண்டுதல் இன்னோர் ஆன்மாவிலிருந்துதான் வர வேண்டும். எந்த ஆன்மாவிலிருந்து இந்தத் தூண்டுதல் வருகிறதோ அவரே குரு, ஆசிரியர். எந்த ஆன்மா தூண்டப்படுகிறதோ, அவரே சீடன் அல்லது மாணவன்.
இவ்வாறு தூண்டுவதற்கு, முதலாவதாக, யார் தூண்டு கிறாரோ அவரிடம் அதற்கான சக்தி இருக்க வேண்டும். ஆற்ற லைத் தம்மிடமிருந்து மற்றொருவருக்குப் பாய்ச்சும் சக்தியை அவர் பெற்றிருக்க வேண்டும். இரண்டாவதாக, பெறுபவரும் அதைப் பெறுவதற்குத் தகுதியானவராக இருக்க வேண்டும். விதை உயிருள்ளதாக இருக்க வேண்டும், நிலமும் நன்கு உழப் பட்டுத் தயாராக இருக்க வேண்டும். இந்த இரண்டு நியதி களும் நிறைவேறும்போது, அற்புதமான ஆன்மீக வளர்ச்சி ஏற்படுகிறது.
‘ஆன்மீகத்தைப்பற்றிப் பேசுபவர் அற்புதமானவராக இருக்க வேண்டும். கேட்பவரும் அப்படியே இருக்க வேண்டும்.’ இருவரும் சிறப்பான, அசாதாரணமானவர்களாக இருக்கும் போது மட்டுமே மிகச் சிறந்த ஆன்மீக வளர்ச்சி ஏற்படுகிறது. இல்லாவிட்டால் ஏற்படாது. இவர்களே உண்மையான குரு மார்கள், இவர்களே உண்மையான சீடர்கள். இவர்களோடு ஒப்பிடும்போது மற்றவர்கள் ஆன்மீகத்தோடு விளையாடு கிறார்கள்; தங்கள் அறிவாற்றலுக்கும் பயிற்சி கொடுக்கிறார்கள்; தங்கள் ஆர்வத்தைச் சிறிது தீர்த்துக் கொள்கிறார்கள்; ஆனால் உண்மையில், இன்னும் வெளி விளிம்பில் நின்றுகொண்டிருக் கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்குச் சிறிது பலன் உண்டு; எல்லாம் நாளடைவில் வந்து சேரும். பல வயல் தயாரானதும், விதை வந்து சேர்ந்தேயாக வேண்டும் என்பது இயற்கையின் அறியொணா நியதியாகும். அதுபோல் ஒருவனுக்கு ஆன்மீகம் தேவை என்று வரும்போது, அதற்கான ஆன்மீக ஆற்றலை அளிப்பவர் வந்தே தீரவேண்டும். ‘தேடிக் கொண்டிருக்கும் பாவி, தேடிக் கொண்டிருக்கும் ரட்சகரைச் சந்திக்கிறான்.’ ஆன்மீகத்தைத் தேடும் ஆன்மாவில் ஈர்ப்பு சக்தி முதிர்ந்து, நிறைந்திருக்கும்போது, அந்த ஈர்ப்பின் வசப்பட்டு, அருள்புரியும் சக்தி வந்தேயாக வேண்டும்.
ஆனால் வழியில் பேராபத்துக்கள் பல உள்ளன. சாதகன் தன் மனத்தில் தோன்றும் தற்காலிக உணர்ச்சிப்பெருக்கை உண்மையான ஆன்மீக தாகம் என்று தவறாக நினைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நம் வாழ்க்கையில் இப்படி நிகழ்வதைப் பல வேளைகளில் காண்கிறோம். நாம் நேசிக்கும் ஒருவர் இறந்து விடுகிறார்; அந்தக் கணம் ஓர் அடியை உணர்கிறோம், உலகமே நம் காலடியிலிருந்து நழுவுகிறது. உடனே ஏதோ உயர்ந்த ஒன்றை நாட நினைக்கிறோம், ஆன்மீக வாழ்வில் ஈடுபட விரும்புகிறோம். ஆனால் இந்த அலை சில நாட்களுக்குத்தான், பின்னர் மறைந்துவிடும்; நாம் முன்பு எங்கு இருந்தோமோ, அங்கேயே இருக்கக் காண்போம். இத்தகைய உணர்ச்சிவேகங் களை உண்மையான ஆன்மீக தாகம் என்று தவறாக எத் தனையோ முறை எண்ணிவிடுகிறோம். இத்தகைய தற்காலிக உணர்ச்சிவேகங்களை இப்படித் தவறாக எண்ணும்வரை உண்மையான, தொடர்ந்து நிற்பதான ஆன்மீக தாகம் ஏற் படாது. அதைத் தணிக்கின்ற குருவையும் நாம் காண முடியாது.
நாம் எவ்வளவோ விரும்பியும், நமக்கு உண்மை இன்னும் கிடைக்கவில்லை என்று நாம் அங்கலாய்த்துக் கொள்ளும் போது, நமது முதல் கடமை, நம்முடைய உள்ளத்தையே ஆராய்ந்து பார்த்து, உண்மையிலேயே நாம் உண்மையை விரும்புகிறோமா என்று கண்டுபிடிப்பதுதான். பெரும்பாலோர் விஷயத்தில், நாம் இன்னும் தகுதி பெறவில்லை , நாம் அதை விரும்பவில்லை, நமக்கு உண்மையான ஆன்மீக தாகம் இன்னும் ஏற்படவில்லை என்பதையே காண்போம்.
குரு விஷயத்தில் வேறு பிரச்சினைகளும் உள்ளன. எத் தனையோ பேர் தாங்கள் அறியாமையில் உழன்று கொண் டிருந்தும், செருக்கின் காரணமாக, தங்களுக்கு எல்லாம் தெரி யும் என்று நினைக்கிறார்கள். அத்துடன் நிற்பதில்லை. மற்றவர் களுக்கும் வழிகாட்ட விரும்புகிறார்கள். இறுதியில் குருடன் குருடனுக்கு வழிகாட்டுவதுபோல் இருவரும் குழியில் விழு கிறார்கள். இத்தகையோர் உலகில் ஏராளம், ஏராளம் குருவாக இருக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள். ஒவ்வொரு பிச்சைக்காரனும் கோடி ரூபாய் நன்கொடை கொடுக்க விரும்பு கிறான். இவர்கள் எவ்வளவு ஏளனத்திற்கு உரியவர்களோ, அவ்வளவு ஏளனத்திற்கு உரியவர்களே இந்தக் குருமார்களும்.
அப்படியானால் உண்மையான குருவை எப்படி அறிவது? முதலாவதாக, சூரியனைக் காண விளக்கொளி தேவையில்லை. சூரியனைப் பார்க்க நாம் மெழுகுவர்த்தி ஏற்று வதில்லை. சூரியன் உதயமாகும்போது அதை இயல்பாக நாம் உணர்ந்து கொள்கிறோம். அதுபோல் குரு என்பவர் வரும் போது, அவர் உண்மையானவர் என்பதை மனம் தானாக உணர்ந்து கொள்கிறது. உண்மை தன் சொந்த ஆதாரங்களின் மீதே நிற்கிறது. உண்மைக்கு வேறு சான்றுகள் தேவையில்லை. அது சுய ஒளி கொண்டது. அது நமது இயல்பின் அடியாழம் வரை ஊடுருவிச் செல்கிறது. பிரபஞ்சம் முழுவதும் எழுந்து நின்று, ‘இது உண்மை ‘ என்பதைப் பறை சாற்றுகிறது.
மிகப் பெரிய குருமார்கள் இவர்களே. சற்று தாழ்ந்த நிலையில் இருப்பவர்களிடமிருந்தும் நாம் உதவி பெறலாம். ஆனால் அவர்களின் நிலையைத் தீர்மானிப்பதற்கு வேண்டிய உள்ளுணர்வு நமக்குப் போதுமான அளவு இல்லாததால் அதனை முடிவு செய்யச் சில சோதனைகள் தேவைப்படுகின்றன. சீடனுக்கும் சரி, குருவிற்கும் சரி, சில தகுதிகள் இருக்க வேண்டும்.
சீடனிடம் இருக்க வேண்டிய தகுதிகள்: பரிசுத்தம், அறிவொளி பெறுவதற்கு உண்மையான தாகம், விடாமுயற்சி.
தூய்மையற்ற ஒருவன் ஆன்மீகவாதியாக இருக்க முடி யாது. இது ஒரு முக்கியமான நியதி. எல்லா விஷயங்களிலும் தூய்மையாக இருப்பது என்பது மிகவும் இன்றியமையாதது.
அடுத்த தகுதி, அறிவொளி பெறுவதற்கு உண்மையான தாகம். ஆனால் அது யாருக்குத் தேவை? இதுதான் கேள்வி. நாம் வேண்டுவதை அடைகிறோம் என்பது மிகமிகப் பழமை யான ஒரு நியதி. யாருக்குத் தேவையோ அவனுக்குக் கிடைக்கும். ஆன்மீகத்தை நாடுவது என்பது மிகக் கடினமான காரியம். பொதுவாக நாம் நினைப்பதுபோல் அவ்வளவு சுலபமானது அல்ல ஆன்மீகம். ஆன்மீகம் என்பது சொற்பொழிவுகளைக் கேட்பதிலோ, நூல்களைப் படிப்பதிலோ இல்லை என்பதை நாம் எப்போதும் மறந்துவிடுகிறோம். ஆன்மீகம் என்பது தொடர்ந்த போராட்டம். வெற்றி கிடைக்கும்வரை, நமது சொந்த இயல்பை நாம் பற்றும்வரை தொடர்ந்து போராடுவது. அது ஒரு நாள், இரண்டு நாள் போராட்டமோ, பல வருடம் அல்லது பல பிறவிப் போராட்டமோ அல்ல. அது நூற்றுக் கணக்கான பிறவிகள் கூட நீடிக்கலாம். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அது உடனேயும் கிடைக்கலாம்; நூற்றுக் கணக்கான பிறவிகளுக்குப் பிறகு கிடைக்காமலும் இருக்கலாம். இதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும். இத்தகைய மன உறுதியுடன் தொடங்கும் சீடன் வெற்றி காண்கிறான்.
குரு விஷயத்தில், அவர் சாஸ்திரங்களின் உட்கருத்தை அறிந்திருக்கிறாரா என்பதை முதலில் பார்க்க வேண்டும். பைபிள், வேதம், குரான் என்று உலகம் முழுவதும் எல் லோரும் படிக்கின்றனர். ஆனால் இவை வெறும் வார்த்தைகள் மட்டுமே; இலக்கணத் தொடர்கள், சொற்றொடர் இலக் கணங்கள், சொல் இலக்கணங்கள், தத்துவங்கள் மட்டுமே. அதாவது, மதத்தின் உலர்ந்த எலும்புகள் மட்டுமே. ஒரு நூல் எவ்வளவு காலத்திற்கு முன் எழுதப்பட்டது என்பதை ஒரு குரு கண்டுபிடிக்கலாம். ஆனால் வார்த்தைகள் என்பவை கருத்துக்களின் வெளித்தோற்றங்கள் மட்டுமே. வார்த்தைகளில் அதிகம் ஈடுபட்டு வார்த்தைகளின் வேகத்தில் மனத்தை ஓடவிடு பவர்கள், அவற்றின் பொருளை, உட்கருத்தை இழந்துவிடு கிறார்கள். ஆகவே குரு, சாஸ்திரங்களின் உட்கருத்தை அறிந் திருக்க வேண்டும்.
‘வார்த்தைகளால் பின்னப்பட்ட வலை ஒரு பெரிய காடு போன்றது. அதில் மனித உள்ளம் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தவிக்கிறது. சொற்களைப் பலவிதமாகச் சேர்ப்பது, அழகிய மொழியைப் பலவிதங்களில் பேசுவது, சாஸ்திரங்களின் நடையைப் பலவிதங்களில் விளக்குவதுஇவையெல்லாம் பண்டிதர்களின் மனமகிழ்ச்சிக்காக மட்டுமே. இவை நம்மைப் பூரணத்துவத்திற்கு அழைத்துச் செல்லாது.’ தங்களை அறிஞர்கள் எனக் கருதி உலகம் புகழட்டும் என்ப தற்காக, அவர்கள் தங்கள் புலமையை இப்படியெல்லாம் வெளிக் காட்டுகிறார்கள். உண்மையான உலக குருமார்களுள் ஒருவர் கூட இப்படி சாஸ்திரங்களை விளக்கவும் முற்பட்டதில்லை; சிதைத்துத் திரித்துப் பொருள் கூறவும் இல்லை; ‘இந்தச் சொல் லிற்கு இதுதான் பொருள். தத்துவ முறைப்படி இந்தச் சொல்லுக்கும் அந்தச் சொல்லுக்கும் இதுதான் தொடர்பு என்றெல்லாம் சொல்லவும் இல்லை.உலகம் தந்துள்ள மாபெரும் குருமார்களைப் பாருங்கள். அவர்களுள் ஒருவர்கூட இப்படிச் செய்ததில்லை. ஆனாலும் அவர்கள் போதித்தார்கள். போதிப்பதற்கு எதுவும் இல்லாத மற்றவர்கள், ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு, ‘அது எப்படித் தோன்றியது? அதை முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் யார்? அவர்கள் என்ன உண்டார்கள்? எப்படித் தூங்கினார்கள்?’ என்பவை குறித்து, மூன்று பகுதிகள் கொண்ட ஒரு நூல் எழுதுவார்கள்.
எனது குருதேவர் ஒரு கதை சொல்வார்: சிலர் ஒரு மாந் தோப்பிற்குச் சென்றனர். அவர்களுள் பெரும்பாலோர் இலை களை எண்ணுவதிலும், அவற்றின் நிறத்தைக் கவனிப்பதிலும், கிளைகளின் அளவைக் கண்டுபிடிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டனர், குறிப்புகளும் எழுதிக் கொண்டனர். பிறகு அற்புத மானதொரு கலந்துரையாடலிலும் ஆழ்ந்தனர். ஆனால் புத்தியுள்ள ஒருவர் மட்டும் தனியே அமர்ந்து, மாழ்பழத்தைத் தின்றுகொண்டிருந்தார். இவர்களுள் யார் கெட்டிக்காரர்?
இலைகளையும் கிளைகளையும் எண்ணுவது, குறிப்புகள் எழுதுவது ஆகியவற்றை மற்றவர்களுக்கு விட்டுவிடுங்கள். இத் தகைய காரியங்களுக்கு மதிப்பு இருக்கவே செய்கிறது, ஆனால் ஆன்மீகத் துறையில் அதற்கு இடம் இல்லை. இத்தகைய காரியங்களால் மனிதன் ஆன்மீகத்தில் ஈடுபட முடியாது. இலை எண்ணுகின்ற இவர்களின் மத்தியில் ஓர் உறுதியான ஆன்மீக வாதியை நீங்கள் காணவே முடியாது.
ஆன்மீகம்தான் மனிதனின் மிக உயர்ந்த லட்சியம்; மிக உயர்ந்த பெருமை. மிக எளிதானதும் அதுவே. அதற்கு இலை எண்ணுதல்’ தேவை இல்லை. நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்க விரும்பினால், ‘ஏசு எங்கே பிறந்தார்? ஜெருசலேமிலா, பெத்லகேமிலா? அவர் தமது மலைப் பிரசங்கத்தை எந்தத் தேதியில் ஆற்றினார்?’ என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண் டிய அவசியமில்லை . மலைப் பிரசங்கத்தை நீங்கள் உணர வேண்டும், அதுதான் தேவை. அது என்று ஆற்றப்பட்டது என்பதைப்பற்றி இரண்டாயிரம் வார்த்தைகள் படிக்கத் தேவை யில்லை. இவை எல்லாம் பண்டிதர்களின் மனமகிழ்ச்சிக்காக! அது அவர்களிடம் இருந்துவிட்டுப் போகட்டும். நாம் அதற்கு ஒரு வாழ்த்துக் கூறிவிட்டு மாழ்பழங்களைச் சுவைப்போம்!
குருவிடம் இருக்க வேண்டிய இரண்டாம் தகுதி, அவர் பாவமற்றவராக இருக்க வேண்டும் என்பதாகும். இங்கிலாந்தில் என் நண்பர் ஒருவர் ஒருமுறை என்னிடம், ‘நாம் ஆசிரியரின் நடத்தையைக் கவனிக்க வேண்டுமா? அல்லது அவர் சொல்வதை மட்டும் ஆராய்ந்து அதை எடுத்துக்கொள்ள வேண்டுமா?’ என்று கேட்டார். அப்படிக் கூடாது. எனக்கு ஒருவர் இயற் பியலையோ வேதியியலையோ அல்லது வேறு அறிவியலையோ கற்பிக்க விரும்பினால், அவருடைய ஒழுக்கம் எப்படி வேண்டு மானாலும் இருக்கலாம். அவரால் இயற்பியலையோ, வேறு அறிவியலையோ கற்பிக்க முடியும். ஏனெனில் அறிவியலுக்குத் தேவையான அறிவு, மூளையைப் பற்றியது; மூளையின் நுட் பத்தைப் பற்றியது. சிறிதுகூட ஆன்ம வளர்ச்சி இல்லாமலும்கூட மிகச் சக்தி வாய்ந்த அறிவாற்றல் ஒருவனிடம் இருக்க முடியும்.
ஆனால் ஆன்மீக விஷயத்தில், தூய்மையற்ற ஒருவரிடம் ஆன்ம ஒளி இருப்பது ஆரம்பத்திலிருந்து முடிவுவரை முடி யாத காரியம். அவர் எதைக் கற்பிக்க முடியும்? அவருக்கே ஒன்றும் தெரியாது. பரிசுத்தம்தான் ஆன்மீக உண்மை . இதயத் தூய்மை உடையவர்கள் பேறு பெற்றவர்கள்.’ அவர்கள் இறைவனைத் தரிசிப்பார்கள். ஆன்மீகம் என்பதன் சாரம் முழு வதும் அந்த ஒரு வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை நீங்கள் அறிந்து கொண்டால், முன்பு சொல்லப்பட்ட எல்லாவற்றையும் அறிந்தவர் ஆவீர்கள்; இனி சொல்லப்போவது அத்தனையும் அறிந்தவர் ஆவீர்கள். நீங்கள் வேறு எங்கும் தேட வேண்டாம். அந்த ஒரு வாக்கியத்தில் உங்களுக்குத் தேவையான அத்தனை யும் இருக்கிறது. மற்ற எல்லா சாஸ்திரங்களும் மறைந்து போனா லும் அந்த ஒரு வாக்கியமே உலகத்தைக் காப்பாற்றிவிட முடியும்.
உள்ளம் தூய்மை பெறாமல் இறைக்காட்சியோ, எல்லாம் கடந்த உண்மையின் காட்சியோ கிடைக்காது. அதனால்தான் குருவிடம் தூய்மை கட்டாயமாக இருக்க வேண்டும். முதலில் அவர் எத்தகையவர் என்று பார்க்க வேண்டும். பிறகுதான் அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். சாதாரண ஆசிரியர்களின் விஷயத்தில் அப்படியல்ல. அங்கு, அவர்கள் எத்தகையவர்கள் என்பதைவிட அவர்கள் என்ன சொல் கிறார்கள் என்பதற்கே நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
ஆன்மீகத்தைப் போதிப்பவரான குரு விஷயத்தில், அவர் எப்படிப்பட்டவர், தூயவரா என்பதைத்தான் முதலில் கவனிக்க வேண்டும். அவர் தூயவராக இருந்தால் மட்டுமே அவரது வார்த்தைகளுக்கு மதிப்பு ஏற்படும். ஆன்மீக ஆற்றலை வழங்கு பவர் அவர். அவரிடம் ஆன்மீக சக்தி இல்லாவிட்டால் அவர் எதை வழங்குவார்? உதாரணமாக, இங்கே இருக்கின்ற வெப்ப அடுப்பில் வெப்பம் இருந்தால்தான் அது வெப்ப அலைகளை வெளியிட முடியும்; இல்லாவிட்டால் முடியாது. அதேபோல் குருவின் சிந்தனை அதிர்வுகள்தான் சீடனின் மனத்திற்குப் பாய்ச்சப் படுகின்றன. அவை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு இடம் மாறுகின்றனவே தவிர, நமது அறிவுச் சக்திகளைத் தூண்டுவதுடன் மட்டும் நின்றுவிடுபவை அல்ல. உண்மையானதும், உணரக்கூடியதுமான ஏதோ ஒன்று குருவிடமிருந்து சீடனை அடைய வேண்டும். ஆகவே முக்கியமான நிபந்தனை, குரு உண்மையானவராக, தூயவராக இருக்க வேண்டும் என்பதுதான்.
மூன்றாவது தகுதி அவரது நோக்கம். ஏதாவது ஓர் உள் நோக்கத்தோடு, அதாவது பெயருக்கும் புகழுக்குமாக அவர் போதிக்கிறாரா அல்லது அன்பிற்காக, உங்கள்மீது கொண் டுள்ள உண்மையான அன்பிற்காக அவர் போதிக்கிறாரா என்று கவனிக்க வேண்டும். குருவிடமிருந்து சீடனுக்கு ஆன்மீக சக்திகள் அனுப்பப்படும்போது அவற்றை அன்பின் மூலமாகத் தான் அனுப்ப இயலும். வேறு எதன்மூலமாகவும் அனுப்ப முடியாது. ஏதோ லாபம், புகழ் என்று எந்த உள்நோக்கத்திற் காகச் செய்தாலும், அனுப்பப்படும் சாதனத்தை அது உடனே அழித்துவிடும். ஆகவே எல்லாம் அன்பின் மூலமாகத்தான் செய்யப்பட வேண்டும்.
கடவுளை அறிந்தவர் மட்டுமே குருவாக இருக்க முடியும். குருவிடம் இந்தத் தகுதிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத் தில்லை; இல்லாவிட்டால் அவரிடம் கற்பது ஆபத்தானது. நல்லதை அவரால் கொடுக்க முடியாவிட்டால், சிலவேளை களில் அவரிடமிருந்து கெட்டது கிடைக்கும் ஆபத்துகூட இருக்கிறது. இந்த விஷயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரை வேண்டுமானாலும் குருவாக ஏற்றுக்கொள்ள இயலாது என்பது இதிலிருந்து தெரிகிறது.
‘ஓடைகள் போதனை செய்கின்றன, கற்கள் போதனை செய்கின்றன” என்றெல்லாம் சொல்வது கவிதைநயத்துடன் விளங்கலாம். ஆனால் தன்னிடம் இம்மியளவாவது உண்மை இல்லாதவன் போதனை செய்ய முடியாது. ஓடைகள் யாருக்குப் போதிக்கின்றன? யாருடைய வாழ்க்கைத் தாமரை உண்மை யான குருவிடமிருந்து பெற்ற ஒளியால் மலர்ந்து விட்டதோ, அவருக்குத்தான் அவை போதனை செய்ய முடியும். இதயம் மலர்ந்துவிட்டால் ஓடைகளிலிருந்தும் போதனை பெறலாம்; கற்களிலிருந்தும் போதனை பெறலாம். அவற்றிலிருந்து ஆன் மீக போதனையும் பெறலாம். ஆனால் மலராத இதயம் அங்கே ஓடைகளையும், உருள்கின்ற கற்களையும்தான் பார்க்கும்.
பார்வையற்றவன் பொருட்காட்சி சாலைக்குப் போகலாம். அவனுக்கு அதனால் ஒரு பயனும் இல்லை . முதலில் அவனது கண்கள் திறக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகுதான் அவன் அங்குள்ளவற்றைப்பற்றித் தெரிந்துகொள்ள முடியும். ஆன்மீகத்தைப் பொறுத்தவரை கண்ணைத் திறப்பவர் குருவே. குரு விஷயத்தில் நம்முடைய உறவு, மூதாதையர்-சந்ததி என்கிற உறவுதான். குரு ஆன்மீக மூதாதையர், சீடன் ஆன்மீக சந்ததி, விடுதலை, சுதந்திரம் என்றெல்லாம் பேசுவது சரி; ஆனால் அடக்கம், பணிவு, மரியாதை, நம்பிக்கை இவை இல்லாமல் ஆன்மீகம் இல்லை. குருவுக்கும் சீடனுக்கும் இடையே இந்த உறவு இருக்கின்ற இடத்தில்தான் ஆன்மீகச் செம்மல்கள் மலர் கிறார்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய உண்மை . இந்தப் பண்புகளைத் தூக்கியெறிந்து விட்டவர்களுக்கு ஆன்மீகம் என்பது வெறும் பொழுதுபோக்கே.
குருவுக்கும் சீடனுக்கும் இடையே இத்தகைய உறவு இல் லாத நாடுகளிலும் சமுதாயங்களிலும், ஆன்மீகம் என்பது கிட்டத்தட்டப் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே இருக் கிறது. இத்தகைய உணர்ச்சி இல்லாவிட்டால் ஆன்மீகம் வராது. முதலாவதாக, சக்தியைப் பாய்ச்சுவதற்கான குரு யாரும் இல்லை. இரண்டாவதாக, எல்லோரும் சுதந்திரமாக இருப்ப தால் யாருக்குப் பாய்ச்சுவது? யாரிடமிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள முடியும்? அப்படியே அவர்கள் கற்றுக்கொள்ள முன் வந்தாலும் அறிவை விலைக்கு வாங்கவே வருகிறார்கள். ‘ஒரு டாலர் பெறுமானமுள்ள ஆன்மீகம் கொடுங்கள்’ என்று கேட் கிறார்கள். ‘இதற்கு ஒரு டாலர் செலவிடக் கூடாதா?’ என்று நினைக்கிறார்கள். இவ்வாறு ஆன்மீகத்தை அடைய முடியாது.
ஒரு குருவினால் பாய்ச்சப்பட்டுச் சீடனுள் புகும் அறி வொளியை விட உயர்ந்ததும், புனிதமானதுமான வேறு ஒன்று இருக்க முடியாது. ஒருவன் பூரண யோகியாகும்போது அது தானாகவே வந்து சேரும். அதை நூல்களிலிருந்து பெற முடியாது. உலகின் நான்கு மூலைகளுக்கும் சென்று உங்கள் தலையை முட்டிக்கொள்ளுங்கள். இமய மலைக்கோ, ஆல்ப்ஸ் மலைக்கோ, காகசஸ் மலைக்கோ, கோபி பாலைவனத்திற்கோ, சஹாரா பாலைவனத்திற்கோ, அல்லது கடலின் அடியாழத் திற்கோ சென்று தேடுங்கள். ஒரு குருவைக் கண்டுபிடிக்கும் வரையில் உங்களுக்கு அது கிடைக்காது. குருவைக் கண்டுபிடி யுங்கள், மகனின் நிலையிலிருந்து அவருக்குச் சேவை செய்யுங் கள்; அவருடைய ஆதிக்கம் உள்ளே செல்ல உங்கள் இதயத்தைத் திறவுங்கள்; அவரிடம் கடவுள் வெளிப்படுவதைக் காணுங்கள்.
குருவைக் கடவுளின் மிக உயர்ந்த வெளிப்பாடாகக் கொள்ள வேண்டும். நமது முழுக்கவனமும் அவர்மீது குவியும் போது, அவர் ஒரு மனிதன் என்ற நிலையிலிருந்து மறைந்து விடுகிறார்; அவரது உருவம் மறையும். அந்த இடத்தில் இறைவனே எஞ்சுவார். இத்தகைய மரியாதையோடும், அன் போடும் உண்மையை அணுகுபவர்களிடம் உண்மையே வடி வான இறைவன் அற்புதமான வார்த்தைகளைப் பேசுவார்; ‘உன் கால்களிலிருந்து மிதியடிகளைக் கழற்றிவிடு, ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கும் இடம் புனிதமானது. அவரது திரு நாமம் ஓதப்படுகின்ற இடம் புனிதமானது. அப்படி இருக்க அந்தத் திருநாமத்தை ஜபித்து வாழ்பவர் எவ்வளவு உயர்ந்தவர்! ஆன்மீக உண்மைகளை அள்ளி வழங்குகின்ற அத்தகையோரை எவ்வளவு பயபக்தியுடன் நாம் அணுக வேண்டும்! இந்த உணர் வோடுதான் நாம் போதனை பெற வேண்டும். இத்தகைய குரு மார்கள் உலகில் மிகக் குறைவே. ஆனால் ஒருபோதும் இவர்கள் அடியோடு இல்லாமல் இருந்ததில்லை. இந்த மனித தெய்வங்கள் உலகில் இல்லாமல் போகின்ற அந்தக் கணமே உலகம் உலகமாக இல்லாமல் போய்விடும்; அது நரகமாக மாறிவிடும், மறைந்து விடும். மனித வாழ்வின் மிக அழகிய மலர்கள் இந்தக் குருமார் களே. உலகம் நடப்பது இவர்களால்தான். இவர்களது ஆற்ற லால்தான் சமுதாயத்தின் இணைப்புகள் சிதறாமல் பிணைந்து செயல்பட்டு வருகின்றன.
இவர்களைத் தவிர இன்னொரு வகை குருமார்கள் உள்ளனர். அவர்கள் உலகின் ஏசுநாதர் போன்றவர்கள். அவர்கள் எல்லா குருமார்களுக்கும் குருவானவர்கள், ஆண்டவனே மனிதராக வந்தவர்கள், மிகவும் உயர்ந்தவர்கள். ஒரு ஸ்பரிசத் தாலேயே, ஒரு சங்கல்பத்தாலேயே அவர்களால் ஆன்மீகத்தை வழங்க முடியும். தாழ்ந்தவர்களும் மிகவும் இழிந்தவர்களும்கூட அதன் விளைவால் ஒரு நொடிப் பொழுதில் மகான்களாகி விடுகிறார்கள். அவர்கள் இப்படி எல்லாம் செய்தது பற்றி நீங்கள் படித்ததில்லையா? சற்று முன்பு நான் விளக்கியது இத்தகைய குருமார்களைப்பற்றி அல்ல. இவர்கள் எல்லா குருமார்களுக்கும் குருவாக இருப்பவர்கள், இறைவனின் மிக மேலான வெளிப் பாடாக உள்ளவர்கள். இவர்களின்மூலமாக அல்லாமல் நாம் இறைவனைக் காண முடியாது. இவர்களை நாம் வழிபடாமல் இருக்க முடியாது. இவர்கள் மட்டுமே நமது வழிபாட்டிற்கு உரியவர்கள்.
இத்தகைய இறைமக்களிடம் அல்லாமல் யாருமே ஆண்ட வனை நேரில் கண்டதில்லை. நம்மால் இறைவனைக் ‘காண’ இயலாது. காண முயலும்போது, அவரது உண்மையான உரு வத்தைப் பயங்கரமாகத் திரித்து கேலிக்கூத்தாக்கி விடுகிறோம். இந்தியக் கதை ஒன்று உண்டு: பாமரன் ஒருவனிடம் சிவபெரு மானின் திருவுருவத்தைச் செய்யும்படிக் கேட்டுக் கொண் டார்கள். அவனும் பல நாள் பாடுபட்டு முயன்றான். இறுதியில் அவன் முடித்தபோது அது ஒரு குரங்கின் உருவமாக இருந்தது. கடவுளை உருவப்படுத்த நாம் முயலும்போது அவரைத் திரித்து விடுகிறோம். நாம் மனிதராக இருக்கும்வரை அவரை மனிதரை விட உயர்ந்த ஒருவராக நம்மால் எண்ணிப் பார்க்க முடியாது. நம்முடைய மனித இயல்பை நாம் கடந்து செல்லும் ஒரு காலம் வரும். அப்போது அவர் எப்படி இருக்கிறாரோ அப்படி அவரை உணர இயலும். ஆனால் நாம் மனிதர்களாக இருக்கும் வரை அவரை மனித வடிவில்தான் வழிபட வேண்டும். நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், என்னவிதமாக வேண்டு மானாலும் முயற்சி செய்யலாம். ஆனால் மனிதனாக அல்லாமல் வேறுவிதமாக அவரைப் பார்க்க முடியாது.
நாம் அறிவாற்றல் மிக்க சொற்பொழிவுகளை ஆற்ற லாம், பெரிய பகுத்தறிவுவாதிகளாகி, கடவுளைப்பற்றிய கதை களெல்லாம் பிதற்றல் என்று நிரூபிக்கலாம். ஆனால் நடை முறைப் பொது அறிவில் நின்று பார்ப்போம். இந்த அதி அற்புத அறிவாற்றலுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? பூஜ்யம், வெறுமை, பயனற்ற நுரை மட்டுமே.
இறை வழிபாட்டை எதிர்த்து, யாராவது அறிவைப் பிழிந்து மாபெரும் சொற்பொழிவு ஆற்றுவதை அடுத்த முறை நீங்கள் கேட்க நேர்ந்தால் அவனை விடாதீர்கள்; ‘கடவுளைப் பற்றி உன் கருத்து என்ன?’ என்று கேளுங்கள். எல்லாம் வல்ல வர், எங்கும் உள்ளவர், எங்கும் நிறைந்த அன்பு’ என்றெல்லாம் அவன் பேசுகிறானே, அந்தச் சொற்களின் எழுத்துக் கூட்டலைத் தவிர, அவற்றின் பொருளைப்பற்றி அவனுக்கு என்ன தெரியும் என்று கேளுங்கள். அவனுக்கு ஒன்றும் தெரியாது; அவனால் ஒரு கருத்திற்கும் உருவம் கொடுக்க முடியாது. ஒரு புத்த கத்தையும் படித்தறியாத, தெருவில் செல்பவனைவிட அவன் எந்த விதத்திலும் மேலானவன் அல்ல. தெருவில் போகிறவன் அமைதியாகவாவது இருக்கிறான், உலகைக் குழப்பாமலாவது இருக்கிறான். இவனோ வாதப் பிரதிவாதங்கள் செய்து மற்ற வர்களின் மனத்தைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறான். இவனும் கடவுளைக் கண்டதில்லை . ஆகவே இவனும் அவனும் ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள்.
மதம் என்பது இறையனுபூதி பெறுவதே. வெற்றுப் பேச்சிற்கும் அனுபூதிக்கும் உள்ள மிகத் தெளிவான வித் தியாசத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் உங்கள் ஆன்மாவில் உணர்வதுதான் அனுபூதி.
இனி, ‘எங்கும் நிறைந்தவர்’ என்பதற்கு என்ன பொருள்? ஆன்மாவைப் பற்றிய கருத்தே மனிதனுக்கு இல்லை. தன் முன்னால் உள்ள பொருட்களோடு இணைத்தே அதை அவன் நினைக்க வேண்டியிருக்கிறது. நீல வானத்தையோ, பரந்த வயல் களையோ, கடலையோ, அல்லது பெரிதாக உள்ள வேறு எதையோதான் அவன் நினைக்க வேண்டும். வேறு எப்படி அவனால் இறைவனை நினைக்க முடியும்? எனவே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எங்கும் நிறைந்தவர் என்று சொல்கிறீர்கள், கடலைப்பற்றி நினைக்கிறீர்கள். கடவுள் கடலா என்ன? வாதங் களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம். நமக்கு நடைமுறைப் பொது அறிவுதான் வேண்டும். ஆனால் அதைப்போன்று அவ்வளவு அரிதாக உள்ளதும் வேறு எதுவும் கிடையாது. உலகமே வெற்றுப் பேச்சால்தான் நிறைந்துள்ளது.
சா நாம் இப்போது மனித உடலமைப்பில் கட்டுண்டிருக் கிறோம். எனவே நம்மால் கடவுளை மனிதனாகத்தான் பார்க்க முடியும். எருமைகள் இறைவனை வழிபட முடியுமானால் அவை அவரை ஒரு பெரிய எருமையாக நினைக்கும். ஒரு மீன் கடவுளை வழிபட விரும்பினால், அது அவரை ஒரு பெரிய மீனாக எண்ணிக்கொள்ளும். மனிதன் ஆண்டவனை மனித ராகவே நினைக்க வேண்டும். இவை வெறும் கற்பனையல்ல. நீங்கள், நான், எருமை, மீன் எல்லாம் பல்வேறு பாத்திரங்கள். இவை அனைத்தும் கடலுக்குச் செல்கின்றன. தங்கள் அளவுக் கேற்றவாறு தங்களுள் நீரை நிறைத்துக் கொள்கின்றன. மனித னில் மனிதனுக்கேற்றபடி, எருமையில் எருமைக்கேற்றபடி, மீனில் மீனுக்கேற்றபடி- ஒவ்வொரு பாத்திரத்திலும் தண்ணீர் தான் உள்ளது. அதேபோல்தான் எல்லோரிலும் உள்ள கடவுள் விஷயமும். மனிதன் அவரைப் பார்க்கும்போது மனிதனாகப் பார்க்கிறான். மிருகங்கள் அவரை மிருகமாகப் பார்க்கின்றன. எல்லோரும் தங்கள் எண்ணப்படியே பார்க்கின்றனர். அவரை இந்த ஒரு வழியில்தான் நீங்கள் பார்க்க முடியும். நீங்கள் அவரை மனிதராகவே வழிபட வேண்டும். ஏனெனில் வேறு வழி இல்லை.
இரண்டு வகையான மனிதர்கள் கடவுளை மனிதராக வழிபடுவதில்லை. ஆன்மீக வாசனையே அற்ற மனித மிருகங்கள் ஒரு வகையினர்; மானிட வாழ்விற்கு அப்பால் சென்று, மனத் தையும் உடலுணர்வையும் துறந்து, இயற்கையின் வரம்பைக் கடந்த பரமஹம்சர்கள் இரண்டாவது வகையினர். இயற்கை முழுவதுமே அவர்களது ஆன்மா ஆகிவிட்டது. அவர்களுக்கு மனமோ உடலுணர்வோ இல்லை. அவர்கள் ஒரு ஏசுவையோ புத்தரையோபோல், கடவுளைக் கடவுளாக வழிபட முடியும்! அவர்கள் அவரை மனிதராக வழிபடவில்லை . இதற்கு எதிர் கோடியில் இருப்பவன் மனித மிருகம்.
ஒன்றுக்கொன்று எதிர்கோடியில் இருப்பவை ஒரேபோல் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். அறியாமையின் கோடியில் இருப்பவனும் அறிவின் கோடியில் இருப்பவனும் இவ்வாறுதான்- இருவருமே யாரையும் வழிபடுவதில்லை. வெறும் முட்டாள், கடவுளை வழிபடுவதில்லை. ஏனெனில் அதன் அவசியத்தை உணரும் அளவுக்கு அவன் வளர்ச்சி அடையவில்லை. மிக உயர்ந்த ஞானத்தைப் பெற்றவன் கடவுளை வழிபடுவதில்லை . அவன் அனுபூதி பெற்றுக் கடவு ளோடு ஒன்றாகிவிட்டான். கடவுளே கடவுளை ஒருபோதும் வழிபடமாட்டார். இந்த இரு துருவ நிலைகளுக்கு இடையில் உள்ள யாராவது, தான் கடவுளை மனிதனாக வணங்கப் போவ தில்லை என்று சொன்னால், அவன் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள். அவன் ஒரு விடலை. அவன் கூறும் மதம் நுனிப் புல் மேய்பவர்களுக்கு உரியது. அது வெறும் அறிவுப் பிதற்றல்.
எனவே இறைவனை மனிதனாக வழிபடுவது மிகவும் இன்றியமையாதது. எந்த இனங்களுக்குத் தாங்கள் வழிபடு வதற்கு அத்தகைய ‘இறை மனிதர்’ இருக்கிறாரோ, அவர்கள் பேறு பெற்றவர்கள். கிறிஸ்தவர்களுக்கு ஏசு என்னும் இறை மனிதர் இருக்கிறார். ஆகவே அவர்கள் அவரை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும், ஒருபோதும் விட்டுவிடக் கூடாது. கடவுளைக் காண அதுதான் இயல்பான வழி-மனிதனில் கடவுளைக் காண்பது. கடவுளைப்பற்றிய நம் எல்லா கருத்துக் களும் அங்கே ஒருமுனைப்பட முடியும். ஆனால் கிறிஸ்தவர் களுடைய ஒரு பெரிய முட்டுக்கட்டை என்னவென்றால், ஏசுவைத் தவிர பிற இறைமனிதர்களை மதிக்காமல் இருப் பதே. ஏசு ஓர் அவதார புருஷர். அவரைப் போன்றவரே புத்தர். இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் இருப்பார்கள். இறை வனை எங்குமே எல்லைப்படுத்தாதீர்கள். இறைவனுக்குச் செலுத்த வேண்டிய எல்லா மரியாதையையும் கிறிஸ்தவர்கள் ஏசுவிற்குச் செலுத்த வேண்டும். அவர்களால் முடியக்கூடிய ஒரே வழிபாடு அதுவே. இறைவனை வழிபட இயலாது. பிர பஞ்சம் முழுவதிலும் அவர் நிறைந்துள்ளார். அவர் மனிதனாக அவதரிக்கிறார்; அந்த அவதார புருஷரிடமே நாம் பிரார்த்திக்க முடியும். கிறிஸ்தவர்கள் ‘ஏசுவின் பெயரால்’ பிரார்த்திப்பது நல்லது. கடவுளிடம் பிரார்த்திப்பதை நிறுத்திவிட்டு, ஏசுவிடம் மட்டுமே பிரார்த்திப்பது இன்னும் நல்லது.
மனிதனது குறைபாடுகள் இறைவனுக்குத் தெரியும். எனவே ‘அறம் தேய்ந்து மறம் எப்போது மேலிடுகிறதோ அப் போது மனித குலத்திற்கு உதவ நான் வருகிறேன்’ என்று கிருஷ்ணர் கூறுகிறார். ‘எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த நான், இந்தப் பிரபஞ்சத்திற்குக் கடவுளான நான் மனித உடல் தரித்து வந்திருக்கிறேன் என்பதை உணராத முட்டாள்கள், அது எப்படி முடியும் என்று என்னை ஏளனம் செய்கிறார்கள். அவர்களது மனத்தை அஞ்ஞானக் கருமேகம் மறைத்திருக்கிறது. எனவே அவரில் அவர்களால் உலக நாயகனான இறைவனைக் காண முடியாது.
இறைவனின் இத்தகைய மாபெரும் அவதாரங்களை வழிபட்டாக வேண்டும். வழிபட்டாக வேண்டும் என்றல்ல, அவர்களை மட்டுமே வழிபட இயலும். அவர்கள் பிறந்த நாளும், உலகை விட்டுச் சென்ற நாளும் மிகவும் பயபக்தியோடு நினைக்க வேண்டிய நாட்கள். ஏசு எப்படிக் கடவுளை வழிபட வேண்டுமென்று விரும்பினாரோ, அப்படியே நான் அவரை வழிபடுவேன். அவர் பிறந்த அந்தப் புனித நாளில், விருந்து உண்பதைவிடப் பட்டினி கிடந்து பிரார்த்தனை செய்வதையே நான் விரும்புவேன். அவர்களைப்பற்றி அடிக்கடி நினைக்கும் போது அந்த மகா புருஷர்கள் நம் இதயத்தில் வெளிப்படு கிறார்கள்; அவர்களைப் போலவே நம்மையும் ஆக்குகிறார்கள். நமது இயல்பு முற்றிலுமாக மாறி நாமும் அவர்களைப்போல் ஆகிவிடுகிறோம்.
ஆனால் புத்தரையும் ஏசுவையும் காற்றில் மிதந்து திரியும் ஆவிகளோடு சேர்த்துவிடாதீர்கள். அது தெய்வ நிந்தனை. தங்கள் ரகசியக் கூட்டத்திற்கு (Seance) ஏசுவின் ஆவி நடனமாட வருகிறது என்று பிதற்றித் திரிகின்ற கூட்டத்தினரை நான் இந்த நாட்டில் கண்டேன். அவதார புருஷர்கள் அவ்வாறு வருவதில்லை. அவர்கள் ஒருவனைத் தொட்டால் போதும், அவனில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஏசு தொடும் போது, அவனது மனம் முழுவதும் மாறுகிறது. அவனும் அவ ரைப் போலவே மாறிவிடுவான். அவனது வாழ்க்கை ஆன்மீக மயமாகிவிடும். ஆன்மீகசக்தி, அவனது மயிர்க்கால்தோறும் வெளிவரும்.
ஏசு நோய்களைக் குணப்படுத்தியதிலும், அற்புதங் களைச் செய்வதிலும் வெளிப்பட்ட சக்தி எத்தகையது? அவை சாதாரணமான இழிந்த சக்திகள். அவற்றை அவரால் வெளிப் படுத்தாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் அவர் இழிந்த மக்களோடு வாழ வேண்டியிருந்தது. இந்த அற்புதங்களை அவர் எங்கே நிகழ்த்தினார்? யூதர்களிடையே. யூதர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அது எங்கே நிகழவில்லை? ஐரோப்பாவில். தம்மை ஏற்காத யூதர்களிடையேதான் அவர் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்; ஏற்றுக்கொண்ட ஐரோப்பாவிற்கு மலைப் பிரசங்கத்தை அளித்தார். சிந்தனைசக்தி படைத்த மனிதன் உண்மையை ஏற்றுக் கொண்டான்; பயனற்றதை உதறித் தள்ளினான்.
ஏசுவின் பேராற்றல், அவர் அற்புதங்கள் நிகழ்த்தியதிலோ நோயாளிகளைக் குணப்படுத்தியதிலோ இல்லை. இவற்றை எந்த மடையனும் செய்யலாம். எந்த முட்டாளும் பிறரைக் குணப்படுத்த முடியும். பிசாசுகள் மற்றவர்களைக் குணப் படுத்த முடியும். பேய்பிடித்த கொடூரமான மனிதர்கள் பிரமிப் பூட்டுகின்ற அற்புதங்கள் நிகழ்த்துவதை நான் பார்த்திருக் கிறேன். அவர்கள் பூமியிலிருந்து பழங்களைக் கொண்டு வரு வார்கள். முட்டாள்களும் பேய்பிடித்தவர்களும் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும்பற்றிக் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். கொடிய வியாதிகளைக்கூட மடை யர்கள் தங்கள் ஒரு பார்வையினால், தங்கள் மனோ சக்தியால் குணப்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். இவையும் உண்மை யில் சக்திகள்தான். ஆனால் இவை பேய்களின் சக்திகள். முதலில் கூறியது, ஏசுவின் ஆன்மீக சக்தி. அது எல்லோரையும் அணைத் துச் செல்கின்ற பேரன்பின் சக்தி. அது எல்லாம் வல்ல சக்தி. அது எப்போதும் வாழும்; வாழ்ந்திருக்கிறது. அவர் அருளிய உண்மையும் என்றும் நிலைக்கும். அவர் ஒரே பார்வையில் குணப்படுத்தியவை மறந்து போகலாம். ஆனால் அவர் கூறிய, ‘இதயத் தூய்மை உடையவர்கள் பேறு பெற்றவர்கள்’ என்ற போதனை இன்றும் வாழ்கிறது. அது அழிவற்ற பேராற்றலின் இருப்பிடம். மனிதன் வாழும்வரை அது ஆற்றலை வழங்கிக் கொண்டேயிருக்கும். இறைவனின் திருநாமத்தை மனிதன் மறக்காததுவரை அது தொடர்ந்து விளங்கிக் கொண்டிருக்கும். ஏசுவிற்கு இருந்த சக்திகளும், அவர் பிறருக்குப் போதித்த ஆற்றல்மிக்க சொற்களும் இவையே. அவரது ஆற்றல் தூய்மை யின் ஆற்றல், நிலையான ஆற்றல். எனவே அவரை வழிபடும் போது, அவரிடம் பிரார்த்தனை செய்யும்போது, நாம் எதைத் தேடுகிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அற்புதங்கள் செய்வதற்கான மூடச்க்தியை நாம் தேடக் கூடாது. மனிதனுக்கு முக்தி அளிக்கின்ற, இயற்கைமீது ஆணை செலுத் தும் ஆற்றலை வழங்குகின்ற, அவனது அடிமைச் சின்னத்தை அகற்றி இறைக் காட்சியை நல்குகின்ற அந்த அற்புத ஆன்ம சக்தியையே நாம் நாட வேண்டும்.