I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
10. நிறைவுரை
பக்தியின் இந்த உயர்ந்த லட்சியத்தை அடைந்த பிறகு தத்துவ விளக்கங்கள் வீசியெறியப்படுகின்றன. அவற்றை யார் பொருட் படுத்துவது? சுதந்திரம், முக்தி, நிர்வாணம் எல்லாம் உதறப்பட்டு விடுகின்றன. தெய்வீக இன்பத்தில் திளைத்திருக்கும்போது யார்தான் முக்தியை விரும்புவார்? ‘ஓ என் பிரபோ, எனக்குச் செல்வம் வேண்டாம், நண்பர்கள் வேண்டாம். அழகு, கல்வி, முக்தி எதுவும் வேண்டாம். மீண்டும்மீண்டும் பிறக்கவும் நான் தயார். ஆனால் நீ எனது அன்புத் தெய்வமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிறவியிலும் நீயே என் அன்புத் தெய்வமாக விளங்க வேண்டும்.’1 ‘சர்க்கரையாக இருக்க யார் விரும்புவார்? நான் சர்க்கரையைச் சுவைக்கவே விரும்புகிறேன்’ என்கிறான் பக்தன். முக்தி பெற்று இறைவனுடன் கலக்கவே அவன் விரும்புவான். ‘நானே அவன் என்பது எனக்குத் தெரிந்திருக்கலாம். ஆனாலும் என்னைஅவனிடமிருந்து விலக்கிக்கொண்டு தனியாக இருப் பேன். அப்போதுதான் என் அன்புக் கடவுளை நான் அனுபவிக்க முடியும்.’ இதுதான் பக்தனின் விண்ணப்பம். அன்பிற்காக அன்பு என்பதுதான் பக்தனின் உயர்பேரின்பம். தன் அன்புக் காதலனை அனுபவிப்பதற்காக ஆயிரமாயிரம் முறைகள் கை கால்கள் கட்டுப்பட்டுக் கிடக்க யார்தான் தயாராக இருக்க மாட்டார்கள்? அன்பைத் தவிர வேறு எதையும் எந்த பக்தனும் பொருட்படுத்துவதில்லை; இறைவன் தன்னிடம் அன்பு செலுத்துவது, தான் இறைவனை நேசிப்பது, அவ்வளவுதான். அதுபோதும் அவனுக்கு. உலகியல் கலவாத இந்த அன்பு, ஆற்றின்மீது புரண்டோடும் அலைகள் போன்றது. அது ஆற்றின் வேகத்தை எதிர்த்து மேல்நோக்கிச் செல்கிறது. உலகம் அவனைப் பித்தன் என்கிறது. உலகம் பித்தன் என்று அழைத்த ஒருவரை எனக்குத் தெரியும். அதற்கு அவரது பதில் இதுதான்; ‘நண்பர்களே, உலகமே ஒரு பைத்தியக்கார விடுதி. சிலர் உலக இன்பத்திற்காகப் பித்தர்களாக உள்ளனர். சிலர் பெயருக்காக, சிலர் புகழுக்காக, சிலர் பணத்திற்காக, சிலர் முக்தியடைவதற் காக, இன்னும் சிலர் சொர்க்கம் செல்ல. இந்தப் பித்தர்கள் கூட்டத்தில் நானும் ஒரு பித்தன். நான் இறைவனுக்காகப் பித்த னாக ஆனேன். நீ பணத்திற்காகப் பித்துப் பிடித்து அலைகிறாய். நான் கடவுளுக்காகப் பித்தன் ஆனேன். நீயும் பைத்தியம். நானும் பைத்தியம். என் பைத்தியம்தான் மிகச் சிறந்தது என்றே நான் நினைக்கிறேன்’.
உண்மையான பக்தனின் அன்பு, கொழுந்துவிட்டு எரியும் இந்த அன்புப் பித்து இதன் முன்னிலையில் மற்ற எல்லாம் அப்படியே மறைந்துவிடுகின்றன. பிரபஞ்சமே அன்புமயம், அன்புமயமானது மட்டுமே என்றுதான் பக்தன் காண்கிறான். அவனுக்கு அப்படித்தான் தெரிகிறது. இத்தகைய பராபக்தியைப் பெற்ற பக்தன் அழிவிலா வாழ்வு பெறுகிறான்; அழிவிலா ஆனந்தம் அடைகிறான். இந்தத் தெய்வீக அன்புப்பித்துதான், நம்மிடமுள்ள உலகியல் நோயிலிருந்து நம்மைக் குணப்படுத்த முடியும். நமது பற்றும் சுயநலமும் மறைந்துவிடும். நாம் இறை வனை அணுகி அவனுக்கு வெகு அருகில் வந்துவிடுவோம். முன்பு தன்னிடம் குடிகொண்டிருந்த வீண் ஆசைகளை எல்லாம் இப்போது பக்தன் எறிந்துவிட்டான்.
பக்தியோகத்தில் நாம் துவைதிகளாகத் தொடங்குகிறோம். இங்கே இறைவன் நமக்கு வேறுபட்டவன்; நாமும் அவனிட மிருந்து வேறுபட்டவர்கள். இடையில் பக்தி வந்துசேர்கிறது. அதன் பயனாக மனிதன் இறைவனை நாடுகிறான்; இறைவனும் மனிதனை நோக்கி அருகில் வருகிறான். தந்தை, தாய், மகன், நண்பன், எஜமான், காதலன் என்று வாழ்க்கையின் பல்வேறு உறவுகளைத் தன் அன்புக் கடவுளின்மீது பொருத்துகிறான். அந்த பக்தனுக்கு இறைவன் இதில் எல்லாம் இருக்கிறான். எப்போது பக்தன், தான் வழிபடும் கடவுளுடன் ஒன்றுபடு கிறானோ, அப்போது அவன் தனது முன்னேற்றத்தின் கடைசிப்படியை அடைந்துவிடுகிறான். நாமெல்லோரும் நம்மை நேசிப்பதில்தான் தொடங்குகிறோம். இப்படி முறை தவறி நம்மை நேசிப்பது, அன்பைச் சுயநலம் உள்ளதாக்குகிறது. இறுதியில் பிரகாசமான ஒளி புலப்படுகிறது. அந்தப் பேரொளி யில் இந்த ஆன்மா பரமாத்மாவுடன் கலக்கிறது. அந்த அன்புப் பேரொளியின் முன் மனிதன் மாறிவிடுகிறான். பக்தி, பக்தன் எல்லாம் ஒன்றே என்ற பரவசமளிக்கும் சிறந்த பேருண்மையை இறுதியில் உணாகிறான.