I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
9. பக்தியை மனித உறவுகளில் காணல்
உண்மை அன்பின் முழு நிறைவாக விளங்கும் இந்தப் பரா பக்தியின் இயல்பைச் சொற்களில் விளக்குவது இயலாததாகும். அதன் குறைவற்ற முழுநிறைவையும் அழகையும் அறிய, மனிதனின் எல்லை மீறிப் பறக்கும் கற்பனைகூடச் சக்தியற்றது. ஆனாலும் பக்திநெறியை அதன் தாழ்ந்த நிலையினாலும் சரி, உயர்ந்த நிலையினாலும் சரி, பின்பற்றி வருபவர்கள் பக்தியை அறிந்து கொள்ளவும், அதன் இலக்கணத்தை விளக்கிக்கூறவும், குறை வுடைய இந்த மனித மொழியைத்தான் எல்லா நாடுகளிலும் பயன்படுத்தி வந்துள்ளனர். இல்லை இல்லை, விளக்க முடியாத இந்த இறையன்பை விளக்க மனித அன்புதான் அதன் பல்வேறு தோற்றங்களில் ஏதோ ஓரளவிற்குப் பயன்படுத்தப்பட்டு வந் துள்ளது. தெய்வீக விஷயங்களை மனிதன் தன் மனித நிலைக்கு ஏற்பத்தான் சிந்திக்க முடியும். தனிப் பரம்பொருளை விளக்க வேண்டுமானால் வரையறைக்கு உட்பட்ட நமது மொழியில் புகுத்தித்தான் அவரை விளக்க முடியும். எல்லையற்றதை எல்லைக்கு உட்பட்ட மொழியில் எழுதியதுதான் இந்தப் பிரபஞ்சம். எனவேதான் பக்தர்கள் இறைவனையும் அவனது வழிபாட்டையும் விளக்குவதற்கு மனித அன்பைக் குறிப்பிடு கின்ற சொற்களையே பயன்படுத்தியுள்ளனர்.
பராபக்தியைப்பற்றி எழுதியுள்ள ஒருசில மாபெரும் ஆச்சாரியர்கள் இந்தத் தெய்வீக அன்பைப் பல்வேறு வழிகளில் அறியவும் அனுபவிக்கவும் பெரிதும் முயன்றுள்ளனர். இந்த அன்பு அதன் கீழ்நிலையில் உணரப்படும்போது சாந்தம் என்று அழைக்கப்படுகிறது. பக்தனின் உள்ளத்தில் அன்பெனும் தீ மூண்டெழாதபோது, அன்பெனும் பித்து அவன் அறிவை ஆட்டிப் படைக்காதபோது, மற்ற சாதாரண அன்பைப்போல் அவனது அன்பும் அமைதியாகச் செல்லும்போது, உருவங்கள், சடங்குகள், புறச்சின்னங்கள் இவற்றைக் கொண்டு செய்கின்ற வழிபாட்டைவிடச் சற்றே உயர்ந்து விளங்கும்போது, பித்தேறிய வனைப் போன்ற தீவிரமான அன்பின் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் சரளமாகச் செல்லும்போது அது சாந்த பக்தி எனப்படுகிறது. ஒரு சிலர் ஆடி அசைந்து மிக மெதுவாக முன் னேறுவதையும், வேறு சிலர் சூறாவளிபோல் முன்னே செல் வதையும் காண்கிறோம். சாந்த பக்தன் நிதானமும் அமைதியும் மென்மையும் கொண்டவனாகத் திகழ்கிறான்.
அடுத்து வருவது, இதைவிடச் சற்று உயர்ந்ததாகிய தாஸ்ய பக்தி- தொண்டனாக இருத்தல். இறைவனுக்கு நான் தொண்டன் என்று பக்தன் கருதுகின்ற நிலை இது. உண்மையான ஊழியன் தன் எஜமானனிடம் கொள்கின்ற பற்று அவனது லட்சியமாகிறது.
அடுத்து வருவது ஸக்ய பக்தி, நட்புநிலை-‘நீ எங்கள் அன்பிற்குகந்த நண்பன்’; தான் செய்த குற்றங்களுக்காகத் தன்னைக் கடிந்துகொள்ளாமல், தனக்குத் தேவைப்படுகின்ற உதவிகளை எப்போதும் செய்துவருகின்ற உண்மை நண்ப னிடம் ஒருவன் தன் உள்ளத்தைத் திறந்து காட்டுகிறான். அது போன்றது இந்த நிலை. உண்மை நண்பர்களுக்கு இடையில் சமத்துவம் நிலவுவதுபோல், இங்கே இறைவனுக்கும் பக்த னுக்கும் இடையே உள்ளும் புறமும் ஒத்த அன்பு நிலவுகிறது. இங்கே இறைவன் நமக்கு உற்ற நண்பன் ஆகிறான், உயிர் நண்பன் ஆகிறான். இந்த நண்பனிடம் நமது முழு வரலாற்றை யுமே தாராளமாகக் கூறலாம். நமது உள்ளத்தின் ஆழத்தில் புதையுண்டு கிடக்கின்ற எல்லா ரகசியங்களையும் தைரியமாக எடுத்துக் கூறலாம். அவரிடமிருந்து ஆறுதலும் பாதுகாப்பும் நிச்சயமாகக் கிடைக்கும்.
இங்கே பக்தன் பகவானைத் தனக்குச் சமமாகக் கொள் கிறான்; விளையாட்டுத் தோழனாகக் கருதுகிறான். இந்த உலகில் நாம் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கிறோம். சின்னஞ் சிறு குழந்தைகள் தங்கள் விளையாட்டை விளையாடுவது போல், பெரிய பெரிய மன்னர்களும் சக்கரவர்த்திகளும் தங்கள் விளையாட்டை விளையாடுவதுபோல், அன்பே வடிவான இறைவனும் இந்தப் பிரபஞ்சத்துடன் விளையாடி வருகிறான்.
இறைவன் பூரணமானவன். அவனுக்கு எதுவும் தேவை யில்லை. அவன் ஏன் படைக்க வேண்டும்? ஒரு தேவையை நிறைவேற்றிக் கொள்ளவே நாம் எல்லோரும் செயல்படுகிறோம். தேவை இருக்கிறது என்றாலே நம்மிடம் நிறைவு இல்லை என்பதுதான் பொருள். கடவுளோ முழு நிறைவானவர். அவ ருக்கு எந்தத் தேவையும் இல்லை. அப்படியிருக்க, தொடர்ந்து செயல்படும் இந்தப் படைப்புத்தொழிலை அவர் ஏன் செய்ய வேண்டும்? அவரது நோக்கம்தான் என்ன? ஏதோ சில நோக் கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இறைவன் உலகத் தைப் படைத்தான் என்ற நமது கற்பனைகள் எல்லாம் நல்ல கதைகளாக இருக்கலாம், அதற்குமேல் அவை எதுவுமில்லை. உண்மையில் எல்லாமே அவனது விளையாட்டு. பிரபஞ்சத்தில் அவனது விளையாட்டு தொடர்ந்தவண்ணமே உள்ளது.
இவையெல்லாமே அவனுக்கு ஒரு வேடிக்கை என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? நீ ஏழையாக இருந் தால், அதை ஒரு வேடிக்கையாக ரசித்து மகிழ். பணக்காரனாக இருந்தால், பணக்காரனாக இருப்பதில் உள்ள வேடிக்கையைக் கண்டு களி. ஆபத்துக்கள் வந்தால் அவையும் நல்ல வேடிக்கை தான். இன்பம் வந்தால் இன்னும் சற்று நல்ல வேடிக்கை, உலகம் வெறும் ஒரு விளையாட்டு அரங்கம் மட்டுமே. விளை யாடுவதற்கும் வேடிக்கையை ரசித்து மகிழ்வதற்கும்தான் நாம் இங்கு இருக்கிறோம். காலங்காலமாக இறைவன் நம்முடன் விளையாடி வருகிறான். நாமும் அவனுடன் விளையாடி வரு கிறோம். அவன் நமது நிரந்தரமான விளையாட்டுத் தோழன். அவன்தான் எவ்வளவு அற்புதமாக விளையாடுகிறான்! ஒரு கல்பம் முடியும்போது விளையாட்டும் ஒரு முடிவுக்கு வருகிறது. சிறிது காலத்திற்கு அல்லது நெடுங்காலத்திற்கு ஓய்வு. மீண்டும் எல்லோரும் வெளிப்பட்டு விளையாடத் தொடங்குகிறோம்.எல்லாம் வெறும் விளையாட்டே, இந்த விளையாட்டு தொடர்ந்து நடைபெற நாம் உதவிவருகிறோம் என்ற உண்மையை மறப்பதால்தான் துன்பங்களும் துயரங்களும் சூழ் கின்றன; இதயம் கனக்கிறது; உலகம் உன்னை மிகுந்த ஆற்ற லோடு அழுத்தத் தொடங்குகிறது. ஆனால் மாறிமாறிச் செல் லும் நிகழ்ச்சிகளைத் தன் இயற்கையாகப் பெற்றுள்ள இந்த மூன்று நிமிடநேர வாழ்க்கையை உண்மை என்று எண்ணும் ஆழ்ந்த நம்பிக்கையை எப்போது நீ கைவிடுகிறாயோ, இந்த உலகம் ஒரு விளையாட்டு மேடை, அதில் நாம் விளையாட வந்திருக்கிறோம், அவனது விளையாட்டிற்குத் துணை செய்ய வந்திருக்கிறோம் என்ற எண்ணத்தை எப்போது அறிகிறாயோ, அந்தக் கணமே உனது துயரங்கள் மறைகின்றன.
அணுக்கள்தோறும் அவன் விளையாடிவருகிறான். உலகங்கள், சூரியசந்திரர்கள் இவற்றையெல்லாம் விளையாட் டாகவே அவன் படைக்கிறான். மனித உள்ளங்களோடு, மிருகங்களோடு, தாவரங்களோடு அவன் விளையாடுகிறான். நாமெல்லாம் அவனுக்குச் சொக்கட்டான் காய்கள். காய்களைப் பலகைமீது வைக்கிறான். பகடைகளைக் குலுக்கிப் போடு கிறான். நம்மை இப்படியும் அப்படியுமாக நகர்த்துகிறான். அறிந்தோ அறியாமலோ அவன் விளையாடும் விளையாட்டில் நாம் அவனுக்கு உதவுகிறோம். ஆஹா! பேரானந்தம்! அவனுடைய விளையாட்டுத் தோழர்கள் அல்லவா நாம்!
அடுத்தது வாத்சல்ய பக்தி. இறைவனைத் தந்தையாகக் கருதாமல், குழந்தையாகக் கருதி வழிபடுவது. இது கேட்பதற்கு வினோதமாக இருக்கலாம். ஆனால் இறைவன் எல்லாம் வல்ல வன் என்ற கருத்தை நம்மிடமிருந்து முற்றிலுமாக நீக்குவதற் கான ஒரு வழி இது. ஆற்றல் என்ற எண்ணமே நம்மிடம் ஒரு வகை அச்சத்தை உண்டாக்குகிறது. அன்பில் பயம் இருக்கக் கூடாது. மரியாதை, பணிவு போன்ற கருத்துக்கள் பண்பாட்டை வளர்ப்பதற்கு இன்றியமையாதவை. பண்பாடு நம்மிடம் உருக் கொண்ட பிறகு, அமைதியும் சாந்தமும் மிக்க அன்பினை உள்ளம் சற்று சுவைத்து மகிழ்ந்த பிறகு, அந்த அன்பு தீவிர மாகிப் பித்தாகியதும், அந்தப் பித்தினைச் சிறிது அனுபவித்து முடித்த பக்தன், அறவழி பற்றியும் ஒழுக்கநெறி பற்றியும் பேச வேண்டிய தேவையில்லை. இறைவனை எல்லாம் வல்லவன், தனித் தலைவன், பெருமை மிக்கவன், உலக நாயகன், தேவாதி தேவர்களுக்கும் தேவன் என்றெல்லாம் அவன் கருதுவதில்லை.
நமக்கு இறைவனிடம் உண்டாகக்கூடிய ஒருவித பயத் திற்குக் காரணமான ஆற்றல் என்பதைக் கடவுள்கருத்திலிருந்து விலக்கவே பக்தன் இறைவனைத் தன் சொந்தக் குழந்தையாக வழிபடுகிறான். குழந்தையைக் கண்டு பெற்றோர் பயம் கொள் வதில்லை, மரியாதை காட்டுவதில்லை. குழந்தையிடமிருந்து அவர்கள் எதையும் கேட்பதில்லை. குழந்தை என்றுமே ஏற்கின்ற நிலைமையில்தான் இருக்கிறது. குழந்தையின்மீதுள்ள பாசத் திற்காகப் பெற்றோர் தங்கள் உடம்பை நூறு தடவை வேண்டு மானாலும் இழக்கத் தயாராக இருக்கின்றனர். தங்கள் ஒரு குழந்தைக்காகத் தங்கள் ஆயிரம் பிறவிகளைப் பலியிடவும் அவர்கள் தயங்குவதில்லை. இந்தக் காரணத்தினால்தான் கடவுளைக் குழந்தையாகக் கருதி அன்பு செய்கின்றனர்.
அவதாரக் கொள்கையில் நம்பிக்கை கொண்ட மதப் பிரிவுகளில்தான் வாத்சல்ய பக்திக் கருத்து இயல்பாகத் தோன்றி வளர்ந்து வந்துள்ளது. முகமதியர்களுக்கு, இறைவனைக் குழந்தையாகப் பாவிப்பது இயலாத செயலாகும். இதைக் கேட் டாலே அவர்கள் நடுங்கிப் பின்வாங்குவார்கள். ஆனால் கிறிஸ் தவர்களும் இந்துக்களும் இந்தப் பாவனையை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் அவர்களுக்குக் குழந்தை ஏசுவும், பால கோபாலனும் உள்ளனர். இந்தியப் பெண்கள் பெரும் பாலும் தங்களைக் கண்ணனின் தாயாகவே கருதுகின்றனர். கிறிஸ்தவத் தாய்மார்களும் ஏசுவின் தாயாகத் தங்களை எண்ணிக் கொள்ளலாம். இது மேலை நாட்டிற்கு இன்று மிகவும் தேவை யான, இறைவனின் தாய்மை நிலை பற்றிய அறிவை வழங்கும்.
இறைவனிடம் நாம் கொண்டுள்ள பயம், மரியாதை போன்ற மூட நம்பிக்கைகள் நமது உள்ளத்தின் அடிமட்டத்தில் ஆழ வேரூன்றியுள்ளன. மதிப்பு, மரியாதை, பயம், ஆற்றல், மகிமை என்ற இவையெல்லாம் பக்தி என்ற கருத்தில் மூழ்கிக் கரைவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கும்.
பக்தியில் இன்னொரு உறவு முறை உள்ளது. அது மதுர பக்தி. அது மிகமிக இனிமையானது; எல்லா நிலைகளிலும் மிகமிக உயர்ந்தது; அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடு; மனிதன் அறிந்தவற்றுள் சக்தி வாய்ந்தது; காதலை அடிப்படையாகக் கொண்டது. எந்த அன்பு மனிதனின் இயல்பையே ஆட்டிப் படைத்து, அவனது அணுக்கள் தோறும் பாய்ந்து பரவி அவ னைப் பித்தனாக்கி, தன்னையே மறக்கச் செய்து, முற்றிலு மாக மாற்றி அவனைத் தேவனாகவோ அசுரனாகவோ செய்ய வல்லதோ, அது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் தோன்றும் காதலைத் தவிர வேறேது? மதுர பக்தியில் இறை வனே நமக்குக் கணவன். நாமெல்லாம் பெண்கள். இவ்வுலகில் யாரும் ஆண் இல்லை. ஒரே ஆண்தான் உண்டு. அது இறைவன். நம் காதலுக்கு அவனே உகந்தவன். ஓர் ஆண் பெண்ணிடமோ, பெண் ஆணிடமோ கொள்ளும் காதலை இங்கே இறைவனிடம் செலுத்த வேண்டும்.
அன்பின் பல்வேறு வெளிப்பாடுகளை உலகில் நாம் காண் கிறோம். அத்தனை அன்புகளோடும் நாம் ஒருவகையில் விளை யாடிவருகிறோம். அவை எல்லாம் இறைவனையே தமது முடி வாக, இலக்காகக் கொண்டுள்ளன. ஆனால் துரதிர்ஷ்டவச மாக மனிதன் இதை அறியவில்லை. இந்த மாபெரும் அன்புநதி இடைவிடாமல் ஓடிக் கலக்கின்ற கங்குகரையற்ற கடலை அவன் அறியவில்லை. எனவே முட்டாள்தனமாக அந்த அன்பைச் சிறுசிறு விளையாட்டுப் பொம்மைகளான மனிதர்களிடம் செலுத்துகிறான். மனிதனுக்குக் குழந்தையிடம் இயல்பாகப் பிறக்கின்ற பேரன்பு உண்மையில் அந்த ஒரு பொம்மையான குழந்தைக்காக அல்ல. இந்த அன்பைக் கண்மூடித்தனமாகக் குழந்தையிடம் மட்டுமே செலுத்தினால், அதன் விளைவாக நீ அவதிப்படப் போவது நிச்சயம். ஆனால் இத்தகைய துன்பங்கள் உன்னை விழிப்புறச் செய்கிறது; உன்னிடம் உள்ள அன்பை மனிதனிடம் செலுத்தினால் அது உடனடியாகவோ, பின்னரோ வேதனையையும் துயரத்தையுமே தரும் என்பதை நீ அறிந்து கொள்கிறாய். எனவே அழிவற்றவனும், மாறுதலற்றவனும், ஏற்ற இறக்கமற்ற சச்சிதானந்தக் கடலாக உள்ளவனுமான தெய்வத்திடமே நாம் அன்பு செலுத்த வேண்டும். அன்பு தனக் குரிய இடத்தை அடைய வேண்டும்; எல்லையற்ற அன்புக்கடலாக விளங்குகின்ற அவனைச் சென்று சேர வேண்டும். எல்லா ஆறுகளும் கடலில் சென்று கலக்கின்றன. மலையிலிருந்து ஓடி வரும் சிறுதுளி நீர்கூட வாய்க்காலையோ ஆற்றையோ அடை கிறது. அந்த வாய்க்காலோ ஆறோ எவ்வளவுதான் பெரிதாக இருந்தாலும் சரி அந்த நீர்த்துளியின் பயணம் நிற்பதில்லை. அது எப்படியோ கடலைச் சென்று அடைந்துவிடுகிறது. .
நம் ஆசைகள், உணர்ச்சிகள் எல்லாவற்றிற்கும் முடிவிடம் இறைவனே. உனக்குக் கோபம் வருமானால் இறைவனிடம் கோபித்துக் கொள். உன் காதலனாகிய இறைவனைக் கடிந்து கொள். உன் தோழனாகிய இறைவனைக் கடிந்துகொள். பய மின்றி இப்படி வேறு யாரை நீ கண்டிக்க முடியும்? மனிதன் உன் கோபத்தைப் பொறுத்துக்கொள்ள மாட்டான்; பதிலுக்குக் கோபிப்பான். என்னிடம் நீ கோபம் கொண்டால் நானும் உடனே என் கோபத்தைக் காட்டுவேன். இது நிச்சயம். உன் கோபத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. ‘நீ ஏன் இன்னும் என்னிடம் வராமல் இருக்கிறாய்? என்னை ஏன் இவ்வாறு தனியாகத் தவிக்கவிட்டாய்?’ என்று இறைவனிடம் கேள். அவனிடம் அல்லாமல் வேறு எங்கு இன்பம் இருக்க முடியும்? வெறும் மண்ணாங்கட்டிகளில் என்ன இன்பத்தைக் காண முடியும்? பேரானந்த ரசக்கட்டி அல்லவா நாம் நாட வேண்டிய இன்பம்! அது இறைவனே.
நம்முடைய ஆசாபாசங்கள் எல்லாம், உணர்ச்சிகள் எல் லாம் அவனை நோக்கிச் செல்லட்டும். அவை அவனுக்காகவே அமைந்தவை. குறி தவறி அவை கீழே செல்லுமானால் தீயவை ஆகிவிடும். இலக்காகிய இறைவனை நேராக அடையுமானால், மிகக் கீழான உணர்ச்சிகள்கூட உருமாறி விடுகின்றன. உடலும் உள்ளமும் தங்கள் சக்திகளை எப்படி வெளிப்படுத்தினாலும் அவற்றின் முடிந்த முடிவாக இருப்பவன் இறைவனே (ஏகாயனன்).
மனித உள்ளத்தில் எழும் அன்பனைத்தும் ஆசையனைத் தும் இறைவனிடமே செல்ல வேண்டும். அவனே நமது அன் பிற்கும் ஆசைக்கும் உரியவன். அவனைத் தவிர வேறு யாரை நம் உள்ளம் காதலிக்க முடியும்? ஒப்பற்ற அழகுடையவன் அவன். மிக மேலானவன் அவன். அவனே அழகு. அவனே மேன்மை. இந்தப் பிரபஞ்சத்தில் அவனைவிட அழகானவர் வேறு யார்? நமக்குக் கணவனாக இருக்க அவனைவிட இந்தப் பிரபஞ்சத்தில் தகுதி வாய்ந்தவர் வேறு யார்? நாம் அன்பு செய்ய இந்தப் பிரபஞ்சத்தில் அவனைவிடத் தகுதியுடையவர் யார்? எனவே அவனே கணவனாக இருக்கட்டும்; அவனே காதலனாக இருக்கட்டும்!
இந்தத் தெய்வீகக் காதலைப் போற்றிப் பாடும் பக்தர்கள், மனிதக் காதலின் பல்வேறு நிலைகளையும் விவரிக்கின்ற மொழி போதுமென்று முடிவு செய்து, அவ்வாறே பாடியுள்ளனர். மூடர்கள் இதை அறிவதில்லை; அறியவும் மாட்டார்கள். அவர்கள் இதை ஊனக்கண்களால் மட்டுமே காண்கிறார்கள். இந்தப் பராபக்தியின் தீவிர வேதனைகள் அவர்களுக்குத் தெரி யாது. அவர்களுக்கு எப்படித் தெரியும்? ‘ஓ! என் அன்பே ! உன் இதழ்களின் அந்த ஆசை முத்தம்! உன் முத்தமொன்று கிடைக்கப் பெற்றவனுக்கு உன்மீது வேட்கை என்றென்றும் அதிகரித்துக் கொழுந்துவிட்டு எரிகிறது. அவனது துன்பங்கள் எல்லாம் ஒழிகின்றன. உன்னைத் தவிர பிற அனைத்தையுமே அவன் மறக்கிறான்.’1 யாருடைய இதழின் ஸ்பரிசம் பக்தனை வெறி கொள்ளச் செய்கிறதோ, மனிதனைத் தெய்வமாக்குகிறதோ, அந்த அன்பரின் அன்பு முத்தத்தை ஏக்கத்துடன் நாடிச் செல். அந்த அன்பு முத்தத்தைப் பெற்றவனுக்கு இயற்கை முழு வதுமே மாறுகிறது; உலகங்கள் மறைகின்றன; சூரிய சந்திரர்கள் மறைகின்றனர்; பிரபஞ்சமே மெதுவாகக் கரைந்து எல்லை யற்றதான அன்புக்கடலில் கலந்துவிடுகிறது. இதுவே பராபக்தி யின், அன்புவெறியின் நிறைநிலை.
உண்மையான தெய்வீகக் காதல் கொண்ட பக்தன் இத் துடன் நின்றுவிடுகிறானா? இல்லை. கணவன்-மனைவிக்கு இடையிலுள்ள அன்புகூட அவனைப் பித்தேற்றப் போதுமான தாக இல்லை. எனவே அவன் கள்ளக் காதலை நாடுகிறான். காரணம், கள்ளக் காதலுக்கு ஆற்றல் மிக அதிகம். அது தவ றானது என்பதைக்கூட அவன் பார்ப்பதில்லை. இந்தக் கள்ளக் காதலின் இயல்பு என்னவென்றால், தடைகள் அதிகரிக்க அதி கரிக்க அது வீறுகொண்டு எழுகிறது. கணவன்-மனைவி யரிடையே நிலவுகின்ற அன்பில் தடைகள் இல்லை. அது மென்மையாகச் செல்லும் அன்பு. எனவே இந்த பக்தன் காதல னிடம் மட்டற்ற அன்புகொண்ட ஓர் இளம் பெண்ணாகத் தன்னைக் கருதிக் கொள்கிறான். அந்தப் பெண்ணின் தாய், தந்தை, கணவன் எல்லோருமே இந்தக் காதலை எதிர்க்கின்றனர். அவர்களின் எதிர்ப்பு வலுக்கவலுக்க, கள்ளக் காதலனிடம் இந்தப் பெண்ணின் காதலும் தீவிரம் அடைகிறது. கண்ணனிடம் காதல்கொண்ட கோபியர் பித்தேறி பிருந்தாவனத் தோட்டங் களில் எப்படி அவனைத் தேடித் திரிந்தனர்! பெரும் பேறு பெற்ற அந்தக் கோபியர்கள் அவனது கானக்குரல் கேட்டு, அவனை அடைய எப்படி ஓடினர்! உலகம், உலகக் கடமைகள், உறவுகள், அவற்றால் வரும் இன்பதுன்பங்கள் எல்லாவற்றையும் மறந்து, துறந்து கண்ணனாகிய காதலனை அடைய எப்படித் துடித்தனர்! இவற்றையும் மனித மொழியில் விளக்க ஒருபோதும் இயலாது.
மனிதா! ஓ மனிதா, நீ பக்தியைப்பற்றி வானளாவப் பேசு கிறாய். அதேவேளையில் உலகின் வீண் பொருட்களில் கருத் தைச் செலுத்தவும் செய்கிறாய். நீ நேர்மையானவனா? ‘எங்கு ராமனோ அங்குக் காமன் இல்லை, எங்குக் காமனோ அங்கு ராமன் இல்லை. இருவரும் சேர்வதில்லை. இருளும் ஒளியும் போல் இருவரும் இணைந்து இருக்க மாட்டார்கள்.’