I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
8. அன்புக் கடவுளுக்குச் சான்றுஅந்த அன்புக் கடவுளே!
தன்னலம், கணக்குப் பார்த்தல், பேரம் பேசுதல், பயம் முதலி யவற்றைக் கடந்து சென்றுவிட்ட பக்தனின் லட்சியம் எது? இத்தகையவன் இறைவனிடம்கூட, ‘என்னிடம் உள்ள எல்லா வற்றையும் உனக்குத் தருகிறேன். உன்னிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம். உண்மையில் என்னுடையது என்று இந்த உலகில் எதுவுமில்லை’ என்று கூறுகிறான். உள்ளத்தில் இத் தகைய உறுதி வரும்போதுதான் பக்தனின் லட்சியம் நிறைவுற்ற பக்தியாகிறது; எதற்கும் அஞ்சாத பராபக்தியாகிறது. பக்தனின் இந்த உயர்ந்த லட்சியத்தில் குறுகிய நோக்கங்களுக்கு இட மில்லை. அவனது அன்பு உலகையே அரவணைத்துச் செல்கின்ற முழுமையான அன்பு, எல்லைகளும் தளைகளும் நீங்கப்பெற்ற அன்பு, பூரண அன்பு. மகோன்னதமான இந்த பக்திலட்சியம் குறியீடுகள், புறச் சின்னங்கள் இவை எவற்றின் துணையுமின்றி லட்சிய நிலையிலேயே விரும்பப்பட்டு, வழிபடப் பெறுகிறது. இதுவே பராபக்தியின் மிகச் சிறந்த நிலை; அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்ட லட்சியத்தின் லட்சியத்தை வழி படுவது. பக்தியின் மற்ற வடிவங்கள் இதை அடையும் வழியில் அமைந்த பல்வேறு படிகளே.
பக்தியோகத்தைக் கடைப்பிடிப்பதில் வரும் நமது வெற்றி தோல்விகள் எல்லாம் லட்சியத்தை அடையும் பாதையில்தான் உண்டாகின்றன. தனது அகலட்சியத்தை, புறப்பொருட்கள்மீது ஒன்றன்பின் ஒன்றாகக் கற்பிக்கிறான் சாதகன். ஆனால் எல்லையின்றி வளர்ந்து செல்கின்ற தனது அக லட்சியத்தைத் தெளிவுபடுத்தும் திறனற்றவை அவை என்பதைக் காண்கிறான். எனவே இயற்கையாகவே அவை ஒவ்வொன்றையும் புறக் கணிக்கிறான். கடைசியாக, புறப்பொருட்களில் லட்சியத்தைக் காண முற்படுவது பயனற்ற செயல் என்பதையும், தன் லட்சியத் துடன் ஒப்பிடும்போது அவையெல்லாம் வெறும் வெறுமை என்பதையும் உணர்கிறான். மிக உயர்ந்ததும், பொதுவானதும், உண்மைப் பொருளாக விளங்குவதுமான லட்சியத்தை முழுமை யாக, உயிரோடும் உணர்வோடும் காணும் சக்தியை நாளடைவில் அவன் பெறுகிறான். இந்த நிலையை அடைந்த பிறகு ‘இறை வனைக் காண முடியுமா? முடியாதா? அவர் எல்லா சக்தியும் எல்லா அறிவும் படைத்தவரா, இல்லையா?’ என்ற கேள்வி களைக் கேட்கும் நிலையில் அவன் இருக்க மாட்டான்.பக்தனுக்கு இறைவன்தான் அன்புக்கடவுள்; அவர்தான் அன்பின் மிகவுயர்ந்த லட்சியம். அவனுக்கு அதுவே போதும். இறைவன் அன்புமயமானவன் என்பது வெளிப்படை. பக்தனுக் குத் தனது அன்புக்கடவுளின் இருப்பை எடுத்துக்காட்ட எந்தப் புறச்சான்றும் தேவையில்லை. நீதிபதிபோல் வீற்றிருக்கும் கடவுளைக் கொண்டாடும் மதப் பிரிவுகளில் வேண்டுமானால் அவரது இருப்பை நிரூபிக்க நிரூபணங்கள் தேவைப்படலாம். ஆனால் பக்தன் அத்தகைய கடவுள்களை எண்ணிக்கூடப் பார்க்க மாட்டான்; பார்க்கவும் முடியாது. அவனுக்கு இறைவன் முழுக்கமுழுக்க அன்பு மயமானவன்.’அன்பிற்குரியவளே, எந்த மனைவியும் கணவனைக் கணவனுக்காக விரும்புவதில்லை; கணவனிடம் இருக்கும் ஆன்மாவிற்காகவே அவனை விரும்பு கிறாள். யாரும், என் அன்பே, மனைவிக்காக மனைவியை விரும்புவதில்லை; ஆனால் மனைவியிடம் இருக்கும் ஆன்மா விற்காகவே மனைவியை விரும்புகிறான்.’
மனிதச் செயல்கள் அனைத்திற்கும் தூண்டுகோலாக இருப்பது சுயநலம் ஒன்றுதான் என்று சிலர் கருதுகின்றனர். அதுவும் அன்புதான்; ஆனால் இது குறிப்பிட்ட ஒரு மனிதனை அல்லது பொருளை விரும்புவதால் தாழ்ந்த நிலைக்கு வந்து விடுகிறது. என்னை நான் உலகத்துடன் ஒன்றுபடுத்திக் காணும் போது கண்டிப்பாக என்னிடம் சுயநலம் இருக்க முடியாது. ஆனால் தவறுதலாக, நான் என்னை ஒரு தனிமனிதனாக, சிறிய வனாகக் கருதும்போது, எனது அன்பு சுருங்கிக் குறுகிவிடுகிறது. அன்பின் எல்லையைச் சுருக்கிக் குறுக்குவதால்தான் இந்தத் தவறு நிகழ்கிறது. உலகிலுள்ள அனைத்தும் கடவுளிலிருந்து தோன்றியவை; நேசிக்கப்பட வேண்டியவை. முழுமையை நேசிக் கும்போது அதில் அடங்கிய பகுதியையும் நாம் நேசிக்கிறோம் என்பதை மனத்தில் கொள்ள கொண்டும். இந்த முழுமைதான் பக்தர்களின் இறைவன். மற்ற தேவதைகள், பரமண்டலத்தில் உள்ள பிதா, ஆண்டவன், படைப்புத் தெய்வம், வாதங்கள், கொள்கைகள், நூல்கள் முதலியவைகளால் பக்தனுக்கு எவ்விதப் பயனும் இல்லை; அவற்றிற்குப் பொருளும் இல்லை. அவன் பராபக்தி எனப்படும் உயர்ந்த அன்பின் காரணமாக, மேற்கூறிய வற்றைக் கடந்து சென்றுவிட்டான். இதயம் தூய்மை அடைந்து துப்புரவாக்கப்பட்டு அன்பு என்ற தெய்வீக அமுதத்தால் நிறைக் கப்பட்டுவிட்ட பின் இறைவனைப் பற்றிய மற்ற எல்லா எண் ணங்களும் சுவையற்றுப் போகின்றன. எனவே அவை தகுதி யற்றவை, மதிப்பற்றவை என்று விலக்கிவிடுகிறான். பராபக்தி இத்தகைய வலிமை வாய்ந்தது! இத்தகைய பக்தன் இறைவனைக் காணக் கோயிலுக்கோ சர்ச்சுக்கோ போவதில்லை. அவனைப் பொறுத்தவரை இறைவன் இல்லாத இடமே இல்லை. அவன் கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் இறைவனைக் காண் கிறான்; மகானுடைய புனிதத்திலும், கொடியவனுடைய பாவத் திலும் இறைவனைக் காண்கிறான். ஏனெனில் இறைவன் வலிமை பொருந்தியவனாக, என்றும் அழியாத அன்பின் ஒளியாக என்றென்றைக்குமாக எப்போதும் மகிமையுடன் தன் இதயத்தில் பிரகாசித்துக் கொண்டிருப்பதை அவன் ஏற்கனவே உணர்ந்து விட்டான்.