I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
7. பக்தி முக்கோணம்
பக்தியை ஒரு முக்கோணத்துடன் ஒப்பிடலாம். அதன் ஒவ் வொரு கோணமும் பக்தியின் பிரிக்க முடியாத ஒவ்வொரு பண்பைக் குறிக்கிறது. மூன்று கோணங்களும் சேராமல் எந்த முக்கோணமும் இருக்க முடியாது. அதுபோலவே பின்வரும் மூன்று பண்புகள் இல்லாமல் உண்மையான பக்தி இருக்க முடியாது.
நமது பக்தி-முக்கோணத்தின் முதல் கோணம், அன்பு வியாபாரப் பொருள் அல்ல என்பதாகும். ஏதாவது விதத்தில் பிரதிபலனில் நாட்டம் இருக்குமானால் அங்கு உண்மையான அன்பு இருக்க முடியாது; அது வெறும் கொடுக்கல்-வாங்கல் வியாபாரம்தான். நாம் செலுத்தும் மரியாதைக்கும் போற்று தலுக்கும் பிரதியாகக் கடவுளிடமிருந்து ‘அது வேண்டும், இது வேண்டும்’ என்ற எண்ணம் இருக்குமானால் உண்மையான பக்தி வளர முடியாது. ஒரு பலனை எதிர்பார்த்து கடவுளை வழிபடுபவர்கள், தாங்கள் விரும்பிய பலன் கிடைக்காவிட்டால் வழிபடுவதை நிறுத்திவிடுவார்கள் என்பது சர்வ நிச்சயம். அன் பிற்கு உரியவன் என்ற காரணத்தினால்தான் பக்தன் இறைவனை நேசிக்கிறான். உண்மையான பக்தனிடம் இந்தத் தெய்வீக உணர்ச்சிக்கு வேறு எந்த நோக்கமோ தூண்டுதலோ இல்லை.
ஒருசமயம் பேரரசன் ஒருவன் காட்டில் முனிவர் ஒருவரைச் சந்தித்தான். சிறிதுநேரம் பேசியபோது அவரது தூய்மையும் ஞானமும் அவனது உள்ளத்தைக் கவர்ந்தன. அவருக்கு அன் பளிப்பாக ஏதேனும் தர எண்ணி அவரைக் கேட்டபோது அவர், ‘என் உணவிற்கான காய்கனிகள் காட்டில் கிடைக் கின்றன. மலையிலிருந்து பாய்ந்து வரும் அருவிநீர் என் தாகத் தைத் தணிக்கிறது. மரப்பட்டை போதிய ஆடையாக உள்ளது. மலைக்குகைகள் எனக்கு வீடு. ஆகவே உன்னிடமிருந்தோ, வேறு யாரிடமிருந்தோ எதற்காக நான் வெகுமதி பெற வேண் டும்?’ என்று கேட்டு அன்பளிப்பை மறுத்தார். அதற்கு அரசன், ‘முனிவரே, நீங்கள் பெற்றுக்கொள்வது என் நன்மைக்காகவே. தயவுசெய்து என்னிடமிருந்து ஏதாவது பெற்றுக் கொள் ளுங்கள். என்னுடன் என் நாட்டிற்கு வாருங்கள். அரண் மனைக்கு அழைத்துச் செல்கிறேன்’ என்று வற்புறுத்தினான். முனிவரும் ஒருவாறு உடன்பட்டு அவனுடன் அரண்மனைக்குச் சென்றார். முனிவருக்கு அன்பளிப்பைக் கொடுப்பதற்கு முன் அரசன் இறைவனை நோக்கி, ‘எம்பெருமானே, எனக்கு மேலும் குழந்தைகளைக் கொடு. செல்வத்தை மிகுதியாகக் கொடு. மேலும்மேலும் நான் நாடுகளைப் பெறுமாறு செய். நல்ல உடல்நலனைத் தா’ என்றெல்லாம் பிரார்த்திக்கத் தொடங் கினான். அரசனுடைய பிரார்த்தனை முடிவதற்கு முன்னரே முனிவர் அமைதியாக அந்த இடத்தைவிட்டுச் செல்லலானார். அதைக் கண்டுக் குழப்பமுற்ற அரசன் படபடப்புடன் அவரைப் பின்தொடர்ந்து, ‘முனிவரே, அன்பளிப்பை வாங்காமலேயே போகிறீர்களே!’ என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர் அரசனைப் பார்த்து, ‘மன்னா, நான் பிச்சைக்காரர்களிடம் பிச்சை ஏற்பதில்லை. நீயே ஒரு பிச்சைக்காரன். எனக்கு உன்னால் என்ன தர முடியும்? உன்னைப்போன்ற ஒரு பிச்சைக்காரனிடம் எதையும் பெற்றுக்கொள்ள நான் முட்டாள் அல்ல. என்னைப் பின்தொடராதே’ என்று கூறிச் சென்றுவிட்டார்.
பிச்சைக்காரர்களுக்கும் உண்மையான பக்தர்களுக்கும் உள்ள வேறுபாடு இங்கே தெளிவாக்கப்படுகிறது. யாசிப்பது அன்பின் மொழியல்ல. முக்திக்காகவோ வேறெதற்காகவுமோ இறைவனை வேண்டுவதுகூட பக்தியைக் கீழ்மைப்படுத்துவ தாகும். அன்பு பிரதிபலனை எதிர்பார்ப்பதில்லை. அன்பு எப் போதும் அன்பிற்காகவே செய்யப்படுகிறது. இறைவனை பக்தன் நேசிக்கிறான் என்றால், அவனால் நேசிக்காமல் இருக்க முடி யாது. அழகிய இயற்கைக் காட்சி ஒன்றைக் கண்டு அதில் மனத்தைப் பறிகொடுக்கிறாய். அதற்காக அதனிடம் ஏதேனும் வெகுமதி எதிர்பார்க்கிறாயா? இல்லையே! அதுபோல் அந்தக் காட்சியும் உன்னிடம் எதையும் கேட்பதில்லை. அந்தக் காட்சி உனக்குப் பேரானந்தத்தைத் தருகிறது, உன் உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் மனப் போராட்டங்களைத் தணிக்கிறது, உன்னை அமைதியில் திளைக்கச் செய்கிறது, அந்த நேரத்திற்கு உன்னை எங்கோ ஓர் உயர் உலகிற்கு இட்டுச் செல்கிறது, உன்னைத் தெய்வீகப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. உண்மை அன்பின் இந்த இயல்புதான் நமது முக்கோணத்தின் முதல் கோண மாகும். உன் அன்பிற்குப் பிரதியாக எதையும் கேட்காதே. உன் நிலை எப்போதும் கொடுப்பவனின் நிலையாக இருக்கட்டும். இறைவனுக்கு உன் அன்பைக் கொடு. பதிலாக அவரிடமிருந்து எதையும் யாசிக்காதே.
பக்தி-முக்கோணத்தின் இரண்டாவது கோணம், அன்பு பயம் அறியாதது என்பதாகும். பயத்தின் காரணமாக இறைவனை நேசிப்பவர்கள் மனிதர்களில் கடைப்பட்டவர்கள்; மனிதர்கள் ஆனாலும் பக்குவப்படாதவர்கள். தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் இவர்கள் இறைவனை வழிபடு கிறார்கள். இவர்களுக்கு இறைவன் என்பவர் ஒரு கையில் சாட்டையும், மற்றொரு கையில் செங்கோலும் ஏந்தியிருக்கும் பெரியதோர் உருவம். அவரது கட்டளைக்கு அடிபணியாமல் போனால் சாட்டையடி கிடைக்கும் என்று நடுங்குகிறார்கள் இவர்கள். இப்படித் தண்டனைக்கு அஞ்சி இறைவனை வழிபடு வது, வழிபாடு என்பதையே தரம் தாழ்த்துவதாகும். அத்தகைய வழிபாடு -அதனை வழிபாடு கொள்வதாக இருந்தால் சற்றும் பக்குவப்படாத தாழ்ந்தநிலை வழிபாடாகும். மனத்தில் ஏதாவது பயம் இருக்கும்வரை அங்கே அன்பு எப்படி வர முடியும்? பயங்கள் அனைத்தையும் வெற்றிகொள்வது அல்லவா அன்பின் இயல்பு! ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண் டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்துபோய் அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறு நாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக் கிறாள். திடீரென்று ஒரு சிங்கம் குழந்தையின்மீது பாய்கிறது. அவள் என்ன செய்வாள்? சிங்கத்தின் வாயில் தன்னை அர்ப் பணித்தாவது குழந்தையைக் காப்பாற்றுவாள் அல்லவா? அன்பு எல்லா பயங்களையும் வெல்கிறது.
உலகிலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்வதான சுயநல நோக்கம்தான் பயத்திற்குக் காரணம். சுயநலத்திற்கும் சிறுமைத் தனத்திற்கும் என்னை நான் அடிமைப்படுத்தும் அளவிற்கு பயம் என்னிடம் அதிகரிக்கிறது. தான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று ஒருவன் நினைப்பானானால் பயம் அவனைப் பற்றிக் கொள்வது நிச்சயம். தான் அற்பன் என்ற எண்ணம் குறையக் குறைய பயமும் குறையும். துளியளவு பயம் இருந்தால்கூட அங்கே அன்பு இருக்க முடியாது. அன்பும் பயமும் இணைந்து இருக்க முடியாதவை. கடவுளை நேசிப்பவன் அவரிடம் பயப் படக் கூடாது. ‘இறைவனின் திருநாமத்தை வீணாகச் சொல் லாதே’ என்ற கட்டளையைக் கேட்டு உண்மையான பக்தன் சிரிக்கிறான். பக்தியில் தெய்வ நிந்தை எப்படி இருக்க முடியும்? இறைவனது திருநாமத்தைச் சொல்லச்சொல்ல-அதை நீ எந்த முறையில் சொன்னாலும் சரி -அதனால் உனக்கு நன்மைதான் உண்டாகும். நீ அவனது திருநாமத்தைத் திரும்பத்திரும்பக் கூறுகிறாய். ஏன்? அவனை நீ உளமார நேசிப்பதால்தான்.
பக்தி-முக்கோணத்தின் மூன்றாவது கோணமாக இருப்பது, அன்புக்குப் போட்டி கிடையாது என்பதுதான். இதுவே பக்தனின் மிக உயர்ந்த லட்சியம். நாம் நேசிப்பவர் மிக உயர்ந்த லட்சிய புருஷராக இல்லாவிட்டால் நமக்கு அவர்மீது உண்மை யான அன்பு தோன்றாது. தவறானவர்களிடம் தவறான வழியில் பலர் அன்பு செலுத்தலாம். ஆனால் அன்பு செலுத்துபவனைப் பொறுத்தவரையில், அவனால் மிக அதிகமாக நேசிக்கப்படுபவர் அவனுக்கு மிகவுயர்ந்த லட்சியமாகவே விளங்குகிறார். ஒருவன் தனது லட்சியத்தை மிகமிகத் தாழ்ந்தவனிடம் காணலாம்; மற் றொருவன் மிகமிக உயர்ந்தவனிடம் காணலாம். எப்படியிருந்தாலும் தனக்கு லட்சியமாக இருப்பவரையே மனிதன் ஆழ்ந்து நேசிக்கிறான்.ஒவ்வொரு மனிதனுடையவும் மிகவுயர்ந்த லட்சியம் இறைவனே. பண்டிதன்-பாமரன், மகான்-பாவி, ஆண்-பெண், படித்தவன்-படிக்காதவன், பண்புடையவன்-பண்பாடற்றவன் என்று அனைவருக்கும் மிகவுயர்ந்த லட்சியம் இறைவன்தான். அழகு, நுண்மை , ஆற்றல் என்னும் மூன்றும் மிகவுயர்ந்த லட்சிய நிலையில் இணைந்த இணைப்புதான் அன்பே வடிவான இறைவனைப்பற்றிய நமது கருத்தின் அறுதி எல்லை.
இந்த லட்சியங்கள் ஏதாவது ஒருவிதத்தில் ஒவ்வொருவர் மனத்திலும் இயல்பாகவே இருந்துவருகின்றன; பிரிக்க முடி யாதபடி நமது மனத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளன. மனித இனத்தின் அனைத்து முயற்சிகளும் இந்த லட்சியங்களை வாழ்க்கையில் செயல்படுத்துவதற்கான போராட்டங்களே. சமுதாயத்தில் நம்மைச் சுற்றி நிகழும் எல்லா செயல்களும், தத்தம் லட்சியங்களை வெளிப்படுத்தி அவற்றைச் செயல்படுத்த மனிதன் மேற்கொள்ளும் முயற்சியின் விளைவுகளே. அகத்தே யிருப்பது புறத்தே வரத் துடிக்கிறது. இடையீடற்ற இந்த லட்சிய வேகம்தான், இந்தத் தூண்டுசக்திதான் மனித குலத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நூற்றுக்கணக்கான பிறப்புகள் சென்றபிறகுதான், பல்லா யிரக்கணக்கான ஆண்டுகள் போராடிய பிறகுதான், அக லட்சியத்தைப் புறச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முழுமையாகச் சரி செய்துகொள்வது வீணான முயற்சி என்பதை மனிதன் ஒருவேளை அறிந்துகொள்வான். இப்படி அறிந்தபின் தன் லட்சியத்தை உலகில் நிறுவுவதற்கு அவன் ஒருபோதும் முயல் வதில்லை. ஆனால் தன் லட்சியத்தையே அறுதி லட்சியமாகக் கொண்டு அன்பின் உச்சியில் நின்றபடி வழிபடத் தொடங்கு கிறான். இந்த உயர் லட்சியம் எல்லா தாழ்ந்த லட்சியங்களையும் தன்னுள் அடக்கியதாக விளங்குகிறது.
காதல்கண்ணிற்கு அட்டக்கருமையானவளும் அழகின் சிகரமாகத் தெரிவாள் என்று சொல்லப்படுவது உண்மைதான். மூன்றாம் மனிதனுக்கு அவள் அப்படித் தெரிய மாட்டாள்; அந்தக் காதலனின் காதல் தவறான இடத்தில் செலுத்தப்பட்ட தாகவே அவனுக்குத் தெரியும். ஆனால் காதலனோ காதலியிடம் அழகின் சிகரத்தையே காண்கிறான்; ஒருபோதும் அட்டக் கருப்பைக் காண்பதில்லை. அழகோ, அழகற்றதோ எது வாயினும் சரி, நம் அன்பிற்குரிய பொருட்களே நமது லட்சி யங்கள் உருவாகிச் செயல்படும் மையங்கள் ஆகின்றன. மக்கள் பொதுவாக எதை வழிபடுகின்றனர்? பராபக்தனின் லட்சிய உச்சியாக விளங்கும் முழு முதற்கடவுளை அல்ல, அல்லவே அல்ல. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவரவர் உள்ளத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் ஒவ்வொருவரும் வழிபடுகின்றனர். ஒவ்வொருவரும் தனது லட்சியத்தையே புறவுலகில் கொண்டுவந்து அதன்முன் மண்டி யிட்டு வணங்குகிறார்கள். அதனால்தான் கொடியவர்களும், ரத்தவெறி பிடித்தவர்களும், ரத்தவெறி கொண்ட கடவுளைப் படைக்கிறார்கள். தங்கள் லட்சியத்தைத்தான் அவர்கள் நேசிக்க முடியும். அதுபோலவே நல்லவனும் இறைவனைப் பற்றிய உயர் லட்சியத்தைக் கொள்கிறான். அவனது லட்சியம் உண்மை யிலேயே மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது தான்.