I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
6. உண்மையான பக்தனுக்கு உயர்ஞானமும் உயர்பக்தியும் ஒன்றே
உயர் ஞானத்தையும்(பரவித்யை), தாழ்ந்த ஞானத்தையும் (அபரவித்யை) உபநிடதங்கள் வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஒரு பக்தனைப் பொறுத்தவரையில் உயர் ஞானத்திற்கும், உயர் பக்தி அதாவது பராபக்திக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. முண்ட க உபநிடதம் (1. 1. 4, 5) பின்வருமாறு கூறுகிறது: ‘நாம் அறியத் தகுந்த ஞானம் இருவகைப்படும் என்று பிரம்ம ஞானிகள் கூறுகிறார்கள். அவை பர ஞானம், அபர ஞானம் என்பன. அபர ஞானம் அல்லது தாழ்ந்த ஞானம் என்பது ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற வேதங்கள் மற்றும் சிக்ஷை (உச்சரிப்பு பற்றியது), கல்பம் (யாகங்கள் பற்றியது) மற்றும் வியாகரணம் (இலக்கணம்), நிருக்தம் (சொற்பொருள் பற்றியது), ஜோதிடம், சந்தஸ் (கவிதை) என்ற வேத அங்கங்கள் ஆறும் சேர்ந்தது. பர ஞானம் என்பதோ மாறாத பரம்பொருளைப் பற்றிய ஞானம்.’
இதிலிருந்து பர ஞானம் என்றால் பிரம்மஞானம் என்பது தெளிவாகிறது. பராபக்தியை தேவீ பாகவதம் பின்வருமாறு விளக்குகிறது: ‘ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத் திற்கு ஊற்றப்படும் எண்ணெயின் தடைபடாத ஒழுக்குப்போல், மனம் இடைவிடாது இறைவனை நினைப்பதே பராபக்தி.’ இதுபோன்றே தடங்கலற்றதும் சலனமற்றதுமான மனத்தையும் இதயத்தையும், பிரிக்க முடியாத அன்புடன் இறைவனிடம் செலுத்துவது உண்மையிலேயே மனிதன் இறைவனிடம் கொள் பவற்றுள் மிக உயர்ந்த அன்பின் வெளிப்பாடு ஆகும். பக்தியின் பிற நிலைகள் அனைத்தும் இந்தப் பராபக்தியை அடைவதற்கு உதவுகின்ற பயிற்சிகளே. இந்தப் பராபக்தி, ராகானுகம் அதாவது ராகபக்திக்குப் பிறகு வரும் பற்றுடன்கூடிய பக்தி எனப்படுகிறது. பராபக்தி பக்தனிடம் உதயமானால் அவனது உள்ளம் இடை விடாமல் இறைவனையே சிந்தித்தபடி இருக்கும்; வேறு எதையும் சிந்திக்காது. இறைவனைத் தவிர வேறு சிந்தனைகளுக்கு அவ னது மனத்தில் இடம் இருக்காது. அவனது ஆன்மா சிறிதும் களங்கமற்ற பரிசுத்தமாக இருக்கும். பராபக்தி ஒன்றே அவனது மனத்தையும் உடலையும் பற்றியிருக்கின்ற எல்லா தளை களையும் அறுத்தெறிந்து விடுதலை அளிக்கிறது. அவன் மட்டுமே இறைவனைத் தன் உள்ளத்தில் இருத்தி வழிபட முடியும். அவனுக்கே உருவங்கள், சின்னங்கள், சாஸ்திரங்கள், கொள்கைகள், நூல்கள் இவற்றால் எந்தப் பலனும் இல்லை. அவற்றின் தேவையும் அவனுக்கு இல்லை. இந்த முறையில் இறைவனை நேசிப்பதும் அவ்வளவு எளிதல்ல.
தனது அன்புக்குப் பிரதியாக ஒன்று கிடைக்கின்ற இடத் தில்தான் பொதுவாக மனித அன்பு தழைக்கிறது. தனது அன் பிற்குப் பிரதியாக அன்பு கிடைக்காதபோது அங்கே வெறுப்பும் அலட்சியமும்தான் ஏற்படுகின்றன. இது இயற்கைதான். ஆனால் அபூர்வமாக எங்கோ ஓரிரு இடங்களில் இதற்கு மாறாக, அன்புக்குப் பிரதியாக அன்பு கிடைக்காதபோதுகூட ஒருவன் அன்பு காட்டுவதைக் காணலாம். விட்டில்பூச்சி நெருப்பிடம் கொள்ளும் அன்பை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அது நெருப்பை நேசித்து நெருங்குகிறது, வீழ்ந்து சாகிறது. இப்படி நெருப்பை நேசித்து அழிவது அந்தப் பூச்சியின் இயல்பிலேயே உள்ளது. ‘அன்பின் இயல்பே அன்பு செய்வது, அதனால் அன்பு செய்கிறேன்’ என்ற நிலை உலகில் நாம் காணக்கூடிய சுயநலமற்ற உயர்ந்த அன்பிற்கு ஒரு நல்ல, மறுக்க முடியாத எடுத்துக்காட்டாகும். ஆன்மீக வாழ்வில் இத்தகைய அன்பு செயல்படும்போது, அது சாதகனை நிச்சயமாகப் பராபக்தியை நோக்கி அழைத்துச் செல்கிறது.