I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
5. உலகம்தழுவிய அன்பும் சரணாகதியும்
முதலில் சமஷ்டியை நேசிக்காமல் வியஷ்டியை எப்படி நேசிக்க முடியும்? நாம் காண்கின்ற இந்த உலகம் வியஷ்டி. இதுபோன்ற கோடிக்கணக்கான வியஷ்டிகளை உள்ளடக்கிய மொத்தம்தான் சமஷ்டி-அது இறைவன். எனவே உலகம் முழுவதையும் நேசிக்க வேண்டுமானால், அதனைத் தன்னிடத்தே ஒரு சிறுகூறாகக் கொண்டுள்ள முழுமுதற் பொருளை நேசிக்க வேண்டும்.
கூறுகளை ஆராய்வதுடன் இந்திய நாட்டுத் தத்துவ ஞானியர் நிற்பதில்லை. மேலோட்டமாக இவற்றை விரைவாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, இந்தக் கூறுகளைத் தன்னுள்ளே கொண்டிருக்கின்ற முழுப்பொருளை ஆராயச் சென்றுவிடு கின்றனர். உலகம்தழுவிய ஒன்றைத் தேடுவதுதான் இந்தியத் தத்துவத்தின், மதத்தின் ஒரே நோக்கமாக உள்ளது. எந்த ஒன்றை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்ததாகுமோ அந்த உண்மைப் பொருளை, பொதுவானதை, முழுத்தொகுதியான முழுமுதற்பொருளை அறிய விழைகிறான் ஞானி. பக்தனோ எந்த ஒருவரை நேசிப்பதன்மூலம் பிரபஞ்சம் முழுவதையும் நேசிக்கலாமோ, அந்தப் பொதுமைப் பொருளை அனுபூதியில் அறிய விரும்புகிறான். எந்த ஆற்றலை அடக்கியாள்வதன்மூலம் பிரபஞ்சம் முழுவதையும் அடக்கியாள முடியுமோ அந்தப் பிரபஞ்சப் பொது ஆற்றலை வசப்படுத்த விரும்புகிறான் யோகி. விஞ்ஞானம், மனஇயல், பக்தி, தத்துவம் என்று எந்தத் துறையை எடுத்தாலும் இந்திய மனம் இத்தகைய பொதுமையைத் தேடு வதையே ஒரே நோக்கமாகக் கொண்டிருந்ததை வரலாறு நமக்குக் காட்டுகிறது.
ஆகவே பக்தன் கண்ட முடிவு இது ஒருவர்பின் ஒருவராக நேசித்துக்கொண்டே போனால் அதற்கு ஒரு முடிவே இருக் காது. எல்லையற்ற காலம்வரை நேசித்துக்கொண்டே போக லாம். இதன்மூலம் உலகை மொத்தமாக நேசிப்பது என்பது நடக்க முடியாது. ஆனால் எல்லா அன்பினுடையவும் ஒட்டு மொத்தமானவன் இறைவன்; முக்தரோ, கட்டுண்டவரோ, முக்தி பெற முயன்று கொண்டிருப்பவரோ யாரானாலும் அவர்களுடைய விருப்பங்கள் அனைத்தின் நிறைவிடம் இறை வன். இந்த அடிப்படைக் கருத்தைப் புரிந்துகொண்டால்தான் உலகம்தழுவிய அன்பு என்ற ஒன்றைக் காட்ட முடியும். இறை வனே சமஷ்டி. நாம் காண்கின்ற இந்த உலகம் என்பது இறைவ னின் வேறு உருவம், வெளிப்பாடு; அவ்வளவுதான். இந்த ஒட்டுமொத்தத்தை நேசித்தால் எல்லாவற்றையும் நேசித் தவர்கள் ஆகிறோம். உலகை நேசிப்பதும், அதற்கு நன்மை செய்வதும் எல்லாம் எளிதாகிவிடும். முதலில் இறைவனை நேசிப்பதால் மட்டுமே இந்த ஆற்றலைப் பெற முடியும். இல்லா மல் உலகிற்கு நன்மை செய்வது என்பதெல்லாம் எளிதல்ல.
‘எல்லாம் அவன் உடைமை. அவன் என் அன்பன். அவனை நான் நேசிக்கிறேன்’ என்கிறான் பக்தன். இவ்வாறு எல்லாமே அவனுக்குப் புனிதமாகத் தெரிகின்றன. ஏனெனில் எல்லாம் இறைவனுக்குச் சொந்தமானவை. எல்லோரும் அவனது குழந்தைகள், அவனுடைய சரீரம், அவனது வெளிப்பாடுகள். அப்படியிருக்க, பிறரைத் துன்புறுத்த எப்படி முடியும்? பிறரிடம் எவ்வாறு அன்பு செலுத்தாதிருக்க முடியும்? இறைவனை நேசிக்கும்போது அதன் விளைவாக, உலகிலுள்ள ஒவ்வொருவ ரிடமும் நமக்கு அன்பு பிறக்கும்.இறைவனை நெருங்கநெருங்க, எல்லாமே அவனிடம் இருப்பதை அதிகமாகக் காண்கிறோம். இந்தப் பேரன்பின் பேரானந்தத்தைத் தனதாக்கிக் கொள்வதில் ஆன்மா வெற்றி காணும்போது எல்லாவற்றிலும் அவனைக் காணத் தொடங்கு கிறது. அதன் பயனாக நம் உள்ளம் நிரந்தர அன்பு ஊற்றாக மாறுகிறது. இந்த அன்பின் இன்னும் உயர்ந்த நிலைகளை நாம் அடையும்போது, உலகப் பொருட்களின் இடையேயுள்ள சிறுசிறு வேற்றுமைகள் கூட நமக்கு அழிந்துவிடுகின்றன. மனிதனை மனிதனாகக் காணாமல் இறைவனாகக் காண் கிறோம். மிருகம் மிருகமாகத் தெரியாமல் கடவுளாகத் தெரி கிறது. புலிகூடப் புலியாகத் தெரிவதில்லை ; இறைவனின் வெளிப்பாடாகத் தெரிகிறது. பக்தியின் இந்த உயர் நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு பிராணிக்கும், ஒவ்வோர் உயிருக்குமே வழிபாடு செய்யப்படுகிறது.
‘ஏவம் ஸர்வேஷுபூதேஷுபக்தி ரவ்யபிசாரிaI இப் கர்த்தவ்யா பண்டிதைர்ஜ்ஞாத்வா ஸர்வபூதமயம் ஹரிம் ||” 1. விஷ்ணு புராணம், 1. 19. 5.
-எம்பெருமானாகிய ஹரி எல்லா உயிர்களிலும் உறை கிறான் என்பதை அறிந்து அறிஞர்கள் எல்லா உயிர்களிடமும் மாறாத அன்பு செலுத்த வேண்டும்.
அனைத்தையும் தன்னுள் ஈர்த்துக் கொள்கின்ற இந்தத் தீவிரமான அன்பினால் நமக்கு இறைவனிடம் பரிபூரணமான சரணாகதி நிலை ஏற்படுகிறது. அதாவது வாழ்க்கையில் எது நடந்தாலும் அது தனக்கு எதிரானது அல்ல என்ற திட நம்பிக்கை (அப்ராதிகூல்யம்) உண்டாகிறது. இந்த நிலையில் துன்பம் வரும்போது ‘வருக, வருக!’ என்று அதனை வரவேற் கிறான் பக்தன். துயரம் வந்தால் ‘துயரமே வா, உன் வரவு நல் வரவாகட்டும். நீயும் என் அன்புத் தலைவனிடமிருந்து அல் லவா வருகிறாய்’ என்பான். பாம்பு வந்தாலும் அதற்கும் ‘வருக’ தான். மரணம் வந்தாலும் புன்சிரிப்புடன் அதனை ஏற்று, ‘ஆகா, நான் எவ்வளவு கொடுத்துவைத்தவன்! என்னிடம் இவை வருகின்றன. இவற்றிற்கும் என் நல்வரவு’ என்று வர வேற்கிறான். இறைவன்மீதும், அவருடையவை அனைத்தின் மீதும் எழுகின்ற பேரன்பிலிருந்து பிறக்கும் இந்தப் பரிபூரண சரணாகதி நிலையில் இன்ப துன்பங்களுக்கு இடையில் அவன் வேறுபாடு காண்பதில்லை. துன்ப துயரங்கள்பற்றி முறையிடு வதும் அவனுக்குத் தெரியாது. இவ்வாறு எந்த முறையீடும் இல்லாமல், அன்பே வடிவான இறைவனது திருவுளத்தை முற்றிலுமாகச் சரணடைந்திருக்கின்ற இந்தப் பெருநிலை, வீர தீரச் செயல்களைச் செய்வதால் வருகின்ற பெருமையைவிட உண்மையிலேயே மிக உயர்ந்தது.
பெரும்பாலோருக்கு உடம்பே எல்லாம், உடம்பே உலகம். உடலின்பம்தான் அவர்களுக்கு எல்லாம். உடம்பைப் பேணு வதும் போற்றிப் பாதுகாப்பதுமான இந்தப் பேய் நம் எல் லோருள்ளும் புகுந்துள்ளது. நாம் பெரியபெரிய பேச்சுக்களைப் பேசலாம், உயர்ந்த தத்துவங்களை விளக்கலாம். ஆனாலும் நாம் கழுகைப் போன்றவர்கள். நமது மனம் கீழே கிடக்கும் அழுகிய மாமிசத் துண்டுகளையே நாடி அலைகிறது. நமது உடல் ஏன் காப்பாற்றப்பட வேண்டும்? அதாவது ஒரு புலி பாய்ந்து வருமானால் நாம் ஏன் உடம்பைக் காக்க முயல வேண்டும்? ஏன் புலிக்கே இரையாகக் கூடாது? புலிக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும்? அப்படிச் செய்வது ஏறக்குறைய தன்னலத் தியாகம்தான், வழிபாடுதான். நான் என்ற எண்ணம் அடியோடு மறைந்துவிடுகின்ற நிலையை உன்னால் அடைய முடியுமா? தலைசுற்றுகின்ற அளவிற்கு மிக உயரமான உச்சி அந்த நிலை; பக்திநெறியின் உயர்ந்த சிகரம் அந்த நிலை. ஒரு சிலரே அதனை எட்டியிருக்கின்றனர். தன்னலத் தியாகத்திற்கு, என்றுமே உள்ளன்புடன் தயாராக இருப்பதாகிய இந்த உச்சியை அடையாதவரை யாரும் முழுமையான பக்தனாக இருக்க முடியாது.
சில நாட்களுக்கோ அதிக நாட்களுக்கோ நாம் எல் லோருமே உடம்பைப் பேணிப் பாதுகாத்துத் திருப்தி அடைய லாம். ஆனால் நமது உடம்புகள் அழிய வேண்டியவை. அவை நிலைத்திருக்க முடியாது. பிறர் பணியில் ஈடுபட்டு உடம்பு அழியப் பெறுபவர்கள் பேறு பெற்றவர்கள். ‘செல்வத்தை, ஏன், தங்கள் உயிரையேகூட பிறருக்குத் தொண்டு செய்வதற்காக முனிவர்கள் தயாராக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகில் ஒன்று நிச்சயம். அது மரணம். இந்த உடல் ஒரு தீய காரியத்திற்காக அழிவதைவிட நல்ல காரியத்திற்காக அழிவது மேலானது அல்லவா?” ஐம்பது ஆண்டுகளுக்கோ நூறு ஆண்டு களுக்கோ நமது ஆயுளை இழுத்துச் செல்லலாம். அதற்குப் பிறகு? சேர்க்கையின் காரணமாக உருவான எதுவும் பிரிந்தே யாக வேண்டும், அழிந்தே தீர வேண்டும். அது அழிகின்ற ஒரு காலம் வந்தே தீரும். ஏசுவும், புத்தரும், முகம்மது நபியும் மறைந்துவிட்டார்கள். உலகப் பெரும் தீர்க்கதரிசிகளும் ஆச் சாரியர்களும் இறந்து போனார்கள்.
‘எல்லாமே தூள் தூளாகச் சிதறி மறையப்போகின்ற நிலையற்ற இந்த உலகில், நமக்குக் கிடைத்திருக்கின்ற காலத்தை முடிந்த அளவு உயர்ந்த வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்கிறான் பக்தன். எல்லா உயிர்களுக்கும் சேவை செய்வதுதான் வாழ்க்கையை மிகவுயர்ந்த அளவிற்கு நல்வழி யில் பயன்படுத்துவதாகும். ‘நாம் உண்மையில் இந்த உடல் தான், இதனை எப்பாடுபட்டாவது பாதுகாக்க வேண்டும், இயன்ற அளவு சிறப்பாகப் பேண வேண்டும்’ என்று கொண் டிருக்கின்ற பயங்கர எண்ணம்தான் உலகின் எல்லா சுயநலங்களுக்கும் காரணமாக இருக்கிறது. நீ உடம்பு அல்ல என்பது உறுதியாக உனக்குத் தெரியுமானால், யாருடனும் உனக்குப் பகையில்லை, போராட்டமில்லை; உனது சுயநல எண்ணங்கள் எல்லாம் அகன்றுவிடும். எனவே உலகப் பொருட் களைப் பொறுத்தவரையில் நம்மை இறந்துவிட்டவர்களாகவே நாம் கருத வேண்டும். இதுவே உண்மையில் சரணாகதி என்கிறான் பக்தன். பொருட்கள் வந்து போகட்டும். ‘எல்லாம் உன் திருவுளப்படியே’ என்பதன் பொருள் இதுதானே தவிர, வலிந்து சென்று சண்டையும் சச்சரவுகளும் செய்துவிட்டு, நம்முடைய குற்றங்குறைகளையும் ஆசாபாசங்களையும் ‘எல்லாம் இறைவன் திருவுளம்’ என்று கூறுவதல்ல. சுயநலம் காரணமாகச் செய்யப்படும் போராட்டங்களால் ஒருவேளை நல்லதும் ஏற்படலாம். அப்போது அது இறைவனின் பொறுப்பு ஆகிறது.
பராபக்தியில் தோய்ந்திருக்கும் பக்தன் எதையும் தனக் கென்று விரும்பாமலும் தனக்கென்று செயல்படாமலும் இருக்க வேண்டும். ‘இறைவா! உன் பெயரில் பெரிய கோயில் களைக் கட்டுகின்றனர். உனக்குப் பெரும் பொருளைக் காணிக்கையாக வழங்குகின்றனர். நானோ ஏழை. எனக்கென்று எதுவுமில்லை . எனவே எனது இந்த உடலையே உன் திரு வடிகளில் சமர்ப்பிக்கிறேன். என்னைப் புறக்கணித்து விடாதே. என்னைக் கைவிட்டு விடாதே. என் தலைவா!’-என்பது போன்ற பிரார்த்தனைதான் பக்தனின் மன ஆழத்திலிருந்து வெளிப்படுகிறது. இத்தகைய பக்தியில் திளைத்திருப்பவனுக் குத் தன்னையே தன் அன்புக் கடவுளுக்குக் காணிக்கையாக்கும் சரணாகதி நிலை மட்டுமே செல்வம், பதவி, பெயர், புகழ், சந்தோஷம் என்ற எல்லாவற்றைவிடவும் உயர்ந்த நிலையாக, மேலானதாகத் தெரிகிறது. இறைவனிடம் புகலடைந்திருக்கும் பக்தனிடம் காணப்படுகின்ற அமைதியும், சாந்தமும் அறிவிற்குப் புலப்படாதவை, ஈடிணையற்றவை. இந்த நிலையில் அவனுக்கு வேறு எந்தவிதமான ஆர்வமும் இல்லை. தன் இறைஆர்வத்திற்கு எதிராக எதையும் அவன் அறிவதில்லை . இத்தகைய உன்னத மான சரணாகதி நிலையில் பற்று என்ற உருவில் இருக்கின்ற எல்லாமே மறைந்துவிடுகின்றன. எல்லா பொருட்களும் யாரில் வாழ்ந்து, வளர்ந்து, ஒடுங்குகின்றனவோ அவனிடம் கொள்ளும் உலகம்தழுவிய அன்பு என்னும் ஒரே ஒரு பற்றுதான் அவனிடம் உள்ளது. இறைவனிடம் பூணும் இந்த பக்திப்பற்று உண்மையில் ஆன்மாவைக் கட்டுவதில்லை; மாறாக எல்லா பந்தங்களையும் அறுத்தெறிகிறது.