I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
4. பக்தி வெளிப்படும் வழிகள்
பக்தி வெளிப்பட்டுத் தோன்றும் சில வழிகளைக் காண்போம்.! முதலாவதாக வருவது மரியாதை (பஹுமானம்) –கோயில் களையும் புண்ணியத் தலங்களையும் மக்கள் மரியாதையுடன் அணுகுவது ஏன்? அங்கெல்லாம் இறைவன் வணங்கப்படு வதால்தான்; அவரது சான்னியத்தியம் அந்த இடங்களில் எல்லாம் நிறைந்திருப்பதால்தான். எல்லா நாடுகளிலும் ஆச்சாரியர்கள் ஏன் போற்றப்படுகிறார்கள்? ஏனெனில் அவர் கள் இறைவனைப்பற்றிப் பேசுகிறார்கள். அதனால் மனித இதயம் இயல்பாகவே அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறது. மரியாதை என்பது அன்பு என்னும் அடியாழத்திலிருந்து எழு கிறது. நாம் விரும்பாத யாரிடமும் நமக்கு மரியாதை தோன்று வதில்லை .
அடுத்தது ப்ரீதி- இறைவனிடம் இன்பம் காணல். புலனின்பப் பொருட்களில்தான் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள்! தான் விரும்புகின்ற ஒன்றை, தனது புலன்கள் நாடுகின்ற ஒன்றை அடைவதற்காக எங்கு வேண்டுமானாலும் செல்லவும் எந்தவித ஆபத்தை எதிர்கொள்ளவும் மனிதன் தயாராக இருக்கிறான். பக்தனிடம் எதிர்பார்க்கப்படுவது இது போன்ற மிகத் தீவிரமான துணிச்சலான அன்புதான். ஆனால் அந்த அன்பு செல்லும் திசை இறைவனை நோக்கியதாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.
அடுத்தது வேதனைகளுள் மிகமிக இனிமையான வேதனை-விரக வேதனை, அன்பிற்குரியவரைக் காணாததால் ஏற்படுகின்ற ஆழ்ந்த மனத்தவிப்பு. இறைவனை இன்னும் அடையவில்லையே, அறிவதற்குத் தகுதியுடைய ஒரே பொரு ளான அவரை இன்னும் அறியவில்லையே என்ற உள்ளார்ந்த ஏக்கத்தினால், நொந்துநொந்து மனம் வெறுத்து, கடைசியில் பக்தன் பித்தனைப்போல் ஆகிவிடும் நிலைதான் விரகம். இந்த மனநிலையின் காரணமாக பக்தனுக்குத் தன் அன்பிற்குரிய வரைத் தவிர பிற அனைத்தின்மீதும் வெறுப்புத் தோன்றுகிறது (இதர விசிகித்ஸா ).
உலக அன்பிலும் இத்தகைய விரக வேதனை ஏற்படுவதை நாம் காண்கிறோம். ஆண் பெண்ணிடமும், பெண் ஆணிடமும் உண்மையான காதல் கொள்ளும்போது, அவர்களுக்குத் தாங்கள் நேசிக்காதவர்களைக் காணும்போது அவர்கள்மீது இயல்பாகவே வெறுப்பு எழுகிறது. பராபக்தி பக்தனைப் பிடித்து ஆட்டும்போதும், மனம் விரும்பாத பொருட்கள்மீது இதே போன்ற வெறுப்பு எழுகிறது. இறைவனைத் தவிர வேறெதை யும்பற்றிப் பேசுவது கூட அவனுக்குச் சுவையற்றதாகத் தோன்றுகிறது.
‘இறைவனை நினை. இறைவனை மட்டுமே சிந்தனை செய். மற்ற பயனற்ற சொற்களைப் பேசுவதை விட்டுவிடு.’1 இறைவனைப்பற்றி மட்டுமே யார் பேசுகிறார்களோ அவர்களை பக்தன் நண்பர்களாகக் கருதுகிறான். பிறவற்றைப் பேசுபவர் களை நண்பர்கள் அல்லாதவர்களாகக் காண்கிறான். இதைவிட மேலானதொரு நிலையையும் அவன் அடைகிறான். அன்பு என்ற ஒரே லட்சியத்திற்காக மட்டுமே அவன் வாழ்கின்ற நிலை அது. இங்கே, அந்த அன்பின் காரணமாக அவனது வாழ்வே இன்பமயமாகவும், வாழத் தகுந்ததாகவும் விளங்குகிறது (ததர்த்த ப்ராணஸம்ஸ்தானம்). இந்த அன்பு இல்லாமல் ஒரு கணம்கூட அவனால் வாழ முடியாது. வாழ்க்கை இன்பமயமாக உள்ளது, ஏனெனில் அதில் இறைவனை நினைக்க முடிகிறது.
ஒருவன் பக்தியில் நிறைநிலையை அடையும்போது, இறைவனது அருட்பேற்றைப் பெறும்போது, இறைவனை அடையும்போது, அவனது திருவடித் தாமரைகளைத் தொடு வது போலாகும்போது ததீயதா (தான் இறைவன் ஒருவனுக்கே சொந்தம்) என்ற நிலையை அடைகிறான். அப்போது அவனது இயல்பு முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு, முற்றிலுமாக மாற்றப்பட்டுவிடுகிறது. அவனது வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறுகிறது. ஆனாலும் பக்தர்களுள் பலர் இறைவனை வழிபடுவதற்கென்றே உலகில் வாழ்ந்துவருகிறார்கள். அந்த ஆனந்தத்தை, வாழ்வின் ஒரே இன்பத்தை அவர்கள் விடுவ தில்லை. ‘மன்னா! எல்லாவற்றிலும் நிறைவு கண்டவர்களும், இதய முடிச்சுக்கள் அனைத்தும் அவிழப் பெற்றவர்களும்கூட அன்பு ஒன்றிற்காகவே ஹரியிடம் அன்பு செய்கின்றனர்; அவரது பெருமை இத்தகையது.’ ‘அந்த மேலான பரம்பொருளை எல்லா தேவதைகளும் வழிபடுகின்றனர். முக்தியை நாடும் எல்லா சாதகர்களும், எல்லா பிரம்மஞானிகளும் வணங்கி வழிபடுகின்றனர்-யம் ஸர்வே தேவா: நமந்தி முமுக்ஷவோ ப்ரஹ்மவாதினச்சேதி அன்பின் ஆற்றல் இத்தகையது. தன்னை முற்றிலுமாக மறந்து எந்தப் பொருளையும் தனதென்று உண ராதவனாகும்போது பக்தன் ‘ததீ’யதா நிலையை அடைகிறான். அவனுக்கு எல்லாமே புனிதம் வாய்ந்தவை. ஏனெனில் எல் லாமே இறைவனது உடைமை.
சாதாரண உலக அன்பில்கூட, அன்பிற்குரியவருக்குச் சொந்தமானவற்றை எல்லாம் புனிதம் வாய்ந்தவையாக, மிகவும் விரும்பத் தக்கதாகப் போற்றுவதைக் காண்கிறோம். மனத்தைக் கவர்ந்தவளின் கைக்குட்டையைக்கூட காதலன் நேசிக்கிறான். இதுபோன்று பக்தன் இறைவனை நேசிக்கும்போது, இறைவ னுக்குச் சொந்தமானது என்ற காரணத்தால் உலகமே அவனது அன்பிற்கு உகந்ததாகிவிடுகிறது.