I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
1. ஆரம்பநிலை தியாகம்
இதுவரை பக்தியின் ஆரம்ப நிலையைப் பார்த்தோம். இனி பராபக்தி அல்லது முதிர்ந்த பக்திபற்றிக் காண்போம். முதலில் இந்தப் பராபக்தியைப் பழகுவதற்கான சில ஆரம்ப சாதனைகளைச் சற்று ஆராய்வோம். இந்தச் சாதனைகள் எல்லாம் மனத்தைத் தூய்மைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டவை. ஜபம், பூஜை, உருவங்கள், சின்னங்கள் போன்ற அனைத்தும் மனத் தூய்மைக்காகவே. இவையனைத்திலும் மிக உயர்ந்த வழி தியாகம். அதன் துணையின்றிப் பராபக்தியின் எல்லைக்குள் நுழையவே முடியாது. இது பலரையும் பயப்படுத்தி விடுகிறது. ஆயினும் தியாகம் இல்லாமல் ஆன்மீக வளர்ச்சியே கிடையாது. நமது யோகங்கள் எல்லாவற்றிலும் தியாகம் இன்றியமையாதது. இதுவே ஆன்மீக வாழ்க்கைக்கு முதற்படி; மதப் பண்பாட்டின் மைய அச்சு; அதன் இதயம். தியாகம்இதுதான் மதம்.
எப்போது மனிதன் உலகப் பொருட்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, ஆழமான விஷயங்களில் ஈடுபட முயற்சிக் கிறானோ, முற்படுகிறானோ; உணர்வுப் பொருளான தான், எப்படியோ ஜடப்பொருளாக, உருவம் பெற்றவனாக ஆகிவிட் டோம், இதனால் ஏறக்குறைய ஜடப்பொருளாகவே ஆகிவிடு வோம் என்பதை அறிந்து, ஜடப்பொருட்களிலிருந்து எப்போது முகத்தைத் திருப்பிக் கொள்கிறானோ அப்போது தொடங்கு கிறது தியாகம்; அப்போது தொடங்குகிறது உண்மையான ஆன்மீக முன்னேற்றம்.
தன் செயல்களின் பலனைத் துறப்பதன் மூலம் கர்மயோகி தியாகம் செய்கிறான். தன் உழைப்பிற்கான பலனில் அவனுக்குப் பற்று இல்லை . இந்த உலகிலும் சரி, மற்ற உலகிலும் சரி, தன் செயல்களுக்கான பரிசை அவன் எதிர்பார்ப்பதில்லை.
இயற்கை முழுவதன் நோக்கமே ஆன்மா அனுபவம் பெறு வதற்காகத்தான் என்பதையும் இந்த எல்லா அனுபவங்களின் மொத்த விளைவுமே, தான் இயற்கையிலிருந்து எப்போதும் பிரிந்து தனித்திருப்பது என்பதை ஆன்மா உணரத்தான் என் பதையும் அறிந்திருக்கிறான் ராஜயோகி. தான் நிலையான, என்றுமுள்ள உணர்வுப் பொருள், ஜடப்பொருள் அல்ல; ஜடப் பொருளோடான தனது சேர்க்கை தற்காலிகமானது என்பதை மனிதன் புரிந்துகொள்ள வேண்டும், உணர வேண்டும். இயற்கை யிலிருந்து பெறும் சொந்த அனுபவத்திலிருந்தே தியாகம் என்னும் படிப்பினையைப் பெறுகிறான் ராஜயோகி.
அனைத்துள்ளும் மிகக் கடுமையான தியாகத்தை மேற் கொள்கிறான் ஞானயோகி. ஏனெனில் திடப்பொருள்போல் கண்முன் காணும் இந்த உலகம் வெறும் தோற்றமே என்று அவன் ஆரம்பத்திலேயே உணர வேண்டியுள்ளது. இயற்கை யிலுள்ள எந்தவகையான சக்திவெளிப்பாடும் ஆன்மாவைச் சேர்ந்தது, இயற்கையைச் சேர்ந்தது அல்ல என்பதை அவன் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. எல்லா அறிவும் எல்லா அனுபவங்களும் ஆன்மாவில்தானே தவிர, இயற்கையில் அல்ல என்பதை அவன் ஆரம்பத்திலிருந்தே அறிய வேண்டியுள்ளது. தான் இயற்கையுடன் பிணைக்கப்பட்டுள்ள எல்லா தளை களிலிருந்தும், தனது பகுத்தறிவின் ஆற்றலால், அவன் தன்னை உடனடியாக விடுவித்துக்கொள்ள வேண்டியுள்ளது. எனவே இயற்கையும், அதைச் சேர்ந்த எல்லா பொருட்களும் தன்னை விட்டு விலகுமாறு அவன் செய்கிறான். அவற்றை மறையச் செய்து, தான் மட்டும் தனித்து நிற்க முயல்கிறான்!
எல்லா தியாகங்களிலும் மிகவும் இயல்பானது என்று நாம் சொல்லத்தக்கது பக்தியோகியின் தியாகம். காரணம், இங்கே மூர்க்கத்தனம் இல்லை. எதையும் விட வேண்டிய தில்லை. எதையும் நம்மிலிருந்து கிழித்தெறிய வேண்டியதில்லை. எதிலிருந்தும் பலாத்காரமாக நம்மை விடுவித்துக்கொள்ளத் தேவையில்லை. பக்தனின் தியாகம் எளிதானது, மென்மையாகச் செயல்படுவது, நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்போல் அவ்வளவு இயல்பானது. –
இத்தகைய தியாகத்தின் வெளிப்பாட்டை, சற்று கேலிக் கூத்தான நிலையிலேனும் நாம் நம்மைச் சுற்றிலும் தினமும் காணத்தான் செய்கிறோம். ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக் கிறான். சிறிதுகாலம் சென்றதும் வேறொருத்தியைக் காதலிக் கிறான்; முதற்காதலியை விட்டுவிடுகிறான். அவள் அவனது உள்ளத்திலிருந்து மெதுவாக அகன்று விடுகிறாள். அவனது மனம் மீண்டும் அவளை நாடுவதில்லை. இதுபோன்றே ஒருத்தி ஒருவனைக் காதலிக்கிறாள். பிறகு அவள் வேறு ஒருவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். முதல் காதலன் அவள் மனத் திலிருந்து மெல்லமெல்ல மறைந்துவிடுகிறான். ஒருவன் தான் வசிக்கும் நகரத்தை நேசிக்கிறான். பிறகு நாட்டை நேசிக்கத் தொடங்குகிறான். அப்போது, நகரத்தின்மீது அவன் கொண்ட ஆழ்ந்த பற்று மெல்ல இயல்பாக மறைகிறது. பிறகு உலகையே விரும்பத் தொடங்கியதும், சொந்த நாட்டின்மீது கொண்டிருந்த வெறித்தனமான பற்று, தானாக, பலாத்காரமாக இல்லாமல், மனத்தை வருத்தாமல் மறைந்து போகிறது.
பண்பாடற்ற மனிதன் கீழான புலனின்பங்களில் தீவிரப் பற்றுக் கொள்கிறான். பண்பட்டவனாக உயரும்போது அறி விற்கு இன்பம் தருபவற்றில் பற்று வைக்கிறான்; அவனது புலனின்ப நாட்டம் நாளுக்குநாள் குறைகிறது. உணவில் நாயும் நரியும் இன்பம் காண்பதுபோல் ஒரு மனிதனால் காண முடி யாது. ஆனால் கல்வி கேள்விகளிலும் கலைச் சாதனைகளிலும் மனிதன் காணும் இன்பத்தை நாய் நரிகள் காண்பதில்லை.
இன்பம், முதலில் கீழ்நிலைப் புலன்களால் உண்டாகிறது. ஒரு மிருகம் உயர்நிலைப் பிறவிகளை அடையும்போது, கீழான நிலையிலுள்ள இன்ப நாட்டங்களில் தீவிரம் குறையத் தொடங்குகிறது. சமுதாயத்தை எடுத்துக்கொண்டால், மனிதன் எவ்வளவு தூரம் மிருக நிலைக்கு அருகில் இருக்கிறானோ, அந்த அளவிற்கு அவனிடம் புலனின்பங்கள் மிகுந்திருக்கின்றன. அவனது நிலை உயரஉயர, பண்பாடு வளரவளர, கல்வி கேள்வி களிலும் கலைகளிலும் அவன் இன்பம் காண்பது அதிகரிக்கிறது. அறிவுத் தளத்தைவிட, சிந்தனை நிலையைவிட மேலான நிலைக்குச் செல்லும்போது, ஆன்மீகத் தளத்தை, தெய்வப் பேருணர்வு நிலையை அவன் அடைகிறான். அங்கு அவன் அடையும் பேரின்பத்திற்கு முன்னால் புலனின்பங்களும் அறி வின்பங்களும் சாரமற்றவையாகி விடுகின்றன. சந்திரன் ஒளி வீசும்போது விண்மீன்கள் ஒளிமங்கிப் போகின்றன. சூரியன் உதித்தாலோ சந்திரன் ஒளிகுன்றிப் போகிறான். பக்திக்குரிய தியாகத்தை அடைய நாம் எதையும் அழிக்க வேண்டியதில்லை. பெருகிவரும் ஒளி வெள்ளத்தில் மங்கலான ஒளிகள் தாமா கவே ஒளியிழந்து, பின்னர் அடியோடு மறைந்துவிடுவதைப் போல், இறையன்பின் முன்னால் புலனின்பமும் அறிவின்பமும் மழுங்கிக் கடைசியில் இருளில் தள்ளப்படுகின்றன.
அந்த இறையன்பு முதிர்ந்து பராபக்தி ஆகிறது. இங்கே உருவங்கள் மறைகின்றன; சடங்குகள் பறந்தோடுகின்றன; சாஸ்திரங்கள் பயனற்றுப் போகின்றன. இத்தகைய ஆழ்ந்த, உயரிய பக்தி உடையவனிடமிருந்து விக்கிரகங்கள், கோயில்கள், சர்ச்சுகள், மதங்கள், உட்பிரிவுகள், நாடு, இனம் என்ற எல்லா சின்னஞ்சிறு எல்லைகளும், தளைகளும் தாமாகவே உதிர்ந்து விடுகின்றன. எதுவும் அவனைப் பந்தப்படுத்துவதில்லை. அவனது சுதந்திரத்தைத் தடை செய்வதில்லை; அவனைக் கட்டுப்படுத்துவதில்லை. கடலில் செல்லும் கப்பல் காந்த மலை யின் அருகே வந்தால் என்ன ஆகும்? இரும்பாணிகளும் பூட்டுக் களும் இழுக்கப்பட்டுக் கழன்று போய், மரச்சட்டங்கள் விடு பட்டு விலகிக் கடல்நீரில் சுதந்திரமாக மிதந்து செல்லும். அது போல் இறையருள், ஆன்மாவைப் பிணைத்து நிற்கும் கட்டுக் களைத் தளர்த்தி அவனை விடுவிக்கிறது.
பக்திக்குத் துணையாக இருக்கும் இந்தத் தியாகத்தில் கடுமை இல்லை, வறட்சியில்லை, போராட்டம் இல்லை, தடை கள் இல்லை, அடக்குமுறைகள் இல்லை. பக்தன் தன் உணர்ச்சி களுள் ஒன்றைக்கூட அடக்க வேண்டியதில்லை. மாறாக, அவன் அவற்றை வலிமை உடையதாக்கி, தீவிரப்படுத்தி, இறைவனை நோக்கித் திருப்பிவிட மட்டுமே பாடுபடுகிறான்.