5. கல்வியும் ஒழுக்கமும்
நினைவின் சக்தி
ஒரு மனிதனுடைய ஒழுக்கம் அல்லது தன்மை எனப்படுவது, அவனுடைய பூ மனப்போக்குகள் அனைத்தும் சேர்ந்து உண்டாவது. அதனை அவனுடைய மனோவிருத்திகளின் தொகுதி எனச்சொல்லலாம். அவன் இன்பமும் துன்பமும் அனுபவிக்கும் நேரத்தில், அவை அவனுடைய மனதில் பலவிதமான உணர்ச்சிகளை உண்டாக்கிச் செல்கின்றன. இவ்வுணர்ச்சித் தொகுதியின் பயனே அவனுடைய குணம் அல்லது தன்மையாகிறது. நம் எண்ணங்களே நம் தன்மையை உண்டாக்கியிருக்கின்றன. இரும்பின்மேல் சம்மட்டி அடிக்கும் ஒவ்வோர் அடியும் அதன் உருவத்தைத் தீர்மானம் செய்வதுபோல் நம் ஒவ்வோர் எண்ணமும் நம் தன்மையைத் தீர்மானம் செய்கிறது. வார்த்தைகள் அவ்வளவு முக்கியமானவையல்ல. எண்ணங்களே மிக முக்கியமானவை. அவற்றிற்கு ஆழ்ந்த சக்தியுண்டு. நெடுங்காலத்துக்குப் பின் நேரக்கூடியதை அவைதான் தீர்மானம் செய்கின்றன. ஆதலால், நாம் நினைக்கும் நினைவுகளைப் பற்றி அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இன்ப துன்பங்களின் பலன்
நமது மனதின் தன்மையை உண்டாக்குவதில் இன்பத்துக்கும்துன்பத்துக்கும் சம பங்கிருக்கிறது. சில ட சந்தர்ப்பங்களில் இன்பத்தைக் காட்டிலும் துன்பமே அதிக நன்மையைச் செய்திருப்பதாகப் புலப்படும். பூவுலகிலேயே தோன்றியுள்ள சான்றோர்களுடைய சரித்திரங்களை ஆராய்ந்து பார்ப்போமாயின், பெரும்பாலும் இவர்களுடைய ஆன்மசக்தியை வெளியே பிரகாசிக்கச் செய்தவை, இன்பத்தைக் காட்டிலும் துன்பமேயெனவும், செல்வத்தைக் காட்டிலும் வறுமையேயெனவும், புகழைக் காட்டிலும் இகழ்வேயெனவும் நாம் அறிந்துகொள்வோம். செல்வத்திலேயே பிறந்து வளர்ந்து, சுகத்தையே அனுபவித்துக் கொண்டிருந்து, துக்கத்தை ஒரு சிறிதும் அறியாமலிருந்தவர்களில் யார்தான் உயர்ந்த வாழ்வைப் பெற்றிருக்கிறார்கள்! மனம் துக்க கடலில் ஆழ்ந்து, சுற்றிலும் கஷ்டங்கள் என்ற புயல்காற்று அடித்துக் கொண்டிருக்க, உள்ளத்திலிருந்த நம்பிக்கையும் தைரியமும் அகன்று, வாழ்க்கையே சூன்யமாகத் தோன்றுகின்ற சந்தர்ப்பங்களில் தான் ஆன்ம ஒளி பிரகாசிக்கிறது..
கர்மத்தின் பயன்
மனமாகிய குளத்தில் கர்மமாகிய கல் விழ, அதனால் எழுந்த சிற்றலைகள் முற்றிலும் அழிந்து போகாமல், தாம் திரும்பி வருவதற்கு அறிகுறியாகிய அடையாளங்களை விட்டுச் செல்கின்றன. நாம் செய்கின்ற ஒவ்வொரு செய்கையும், சரீரத்தின் ஒவ்வோர் அசைவும், நினைக்கின்ற ஒவ்வொரு நினைவும் மனதில் அவற்றுக்கேற்ற பண்புகளைப் பதியச் செய்கின்றன. இவை புறத்தே தோன்றுவதற்குத் தக்க வழியில்லாமலிருப்பினும் மனதில் அடங்கியிருந்து செயல்படும் இயல்பின; ஒவ்வொரு மனிதனுடைய ஒழுக்கமும் தன்மையும் அவனவன் செய்து கொண்ட நடை, உடை பாவனைகளின் பயனாக ஏற்பட்டவை. நல்ல பண்புகள் நிறைந்திருப்பவன் நல்லவனாவான். தீய பண்புகள் கூடியிருப்பவன் தீயவனாவான். ஒருவன் தீய வார்த்தைகளைப் பேசி, தீய எண்ணங்களை எண்ணி, தீய செயல்களையே செய்தால் அவனுடைய உள்ளம் தீய பண்புகளால் நிறைந்திருக்கும். இவ்விதம் உண்டாகிய தீய பண்புகள் அவனை அறியாமலே, அவனது தொழிலையும் தம் வயப்படுத்தும் ஆற்றலுடையன. இந்தக் கெட்ட எண்ணங்கள் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தீய பண்புகளின் தொகுதியினாலேயே அவன் உந்தப்பட்டு, செலுத்தும் வழிச் செல்கிற இயந்திரம்போல, அவன் தீய வழிகளில் செலுத்தப்படுகிறான்.
ஒழுக்கத்தின் உயர்வு
இங்ஙனமே ஒருவன் நல்லெண்ணங்களை எண்ணி நற்கர்மமே புரிவானாயின், அவன் மனதில் நல்ல சுபாவமும் நல்ல பண்புகளும் – உண்டாகும். இவற்றின் பயனாக அவன் தன்னையும் அறியாமல் நற்கர்மங்களில் ஈடுபடுவான். அவன் நெடுங்காலமாக நற்கர்மமே செய்து நல்லெண்ணங்களையே மனதில் கொண்டிருப்பானேயானால், அவன் எப்பொழுதும், எந்நிலையிலும் நல்ல செயல்களையே செய்வான். அவன் தீமைசெய்ய முயன்றாலும் அவன் உள்ளத்தில் அமைந்திருக்கும் நல்ல பண்புகள் அவனைத் தீய வழியில் செல்லவிடாது. அவன் எப்பொழுதும் நல்லுணர்ச்சியுடனேயே இருப்பான். இந்த நிலையிலுள்ள மனிதனை நல்ல சுபாவத்தில் நிலைபெற்றவன் என்று சொல்லலாம். ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின் அவனது பெரிய செயல்களைப் பார்க்க வேண்டாம்; அவன் தன் சாதாரண காரியங்களை எங்ஙனம் செய்கிறான் என்பதைக் கவனிக்க வேண்டும். அவைதாம் ஒருவனுடைய உண்மைத் தன்மையை வெளிக்காட்டும். சில சந்தர்ப்பங்களில் கயவரும் புகழ் பெறுவதுண்டு. எனவே, நிலைமையிலும் பெருந்தன்மையுடன் நடப்பவனே உண்மையிற் பெரியோனாவான்.
மனிதன் பழக்கத்தின் கட்டுக்கு ஆளானவன்
மனதிலே இத்தகைய உணர்ச்சிகள் பல ஒன்று கூடும் போது அவை ஒரு பழக்கமாகின்றன. பழக்கம் இரண்டாம் சுபாவம்’ என்று சாதாரணமாய்ச் சொல்லப்படுவதுண்டு. முதல் சுபாவமும் அதுதான். மனிதனுடைய முழு சுபாவமும் அதுவேயாம். நாம் தற்பொழுது இருக்கும் நிலை எவ்விதமிருப்பினும் இது பழக்கத்தின் பயனாக ஏற்பட்டது. இவ்வுண்மை நமக்கு ஆறுதல் அளிக்கிறது. ஏனெனில் நம் நிலை பழக்கத்தின் பயனாகவிருப்பின், நம் நிலையை நாம் எப்பொழுதும் திருத்தியமைத்துக் கொள்ள முடியும் என்று ஏற்படுகிறதல்லவா? தீய பழக்கங்களை மாற்ற ஒரே மருந்துண்டு. அவற்றுக்கு எதிரான நல்ல பழக்கங்கள் தாம் அவ்வருமருந்தாகும். தீய பழக்கங்களை நல்ல பழக்கங்களால் மாற்ற இயலும். இடைவிடாது நற்காரியங்களைச் செய்; பரிசுத்தமான எண்ணங்களை நினை; கெட்ட எண்ணங்களை அகற்ற அதுதான் ஒரே வழியாகும். எந்த மனிதனையும் திருத்த முடியாதவன் எனச் சொல்லாதே! ஏனெனில் அவன் பழக்கத்தினால் கட்டுப்பட்டவனேயாகிறான். புதிய நல்ல பழக்கங்களால் அவற்றைத் தடுக்க இயலும். மீண்டும் மீண்டும் செய்த நற்பழக்கங்களே உயர்ந்த ஒழுக்கமாகும். பழக்கங்களால் மாத்திரமே மனிதனுடைய ஒழுக்கத்தடையைச் சீர்ப்படுத்த முடியும்.
நம்மை ஆக்குவது நாமே
நம் துன்பம் அனைத்திற்கும் காரணம் நம் உள்ளத்திலேயே இருக்கிறது. அதற்காகத் தேவர்களையோ கடவுளையோ குறை சொல்லவேண்டாம். அல்லது அதை மாற்ற முடியாதெனச் சலிப்பும், சோர்வும் கொள்ள வேண்டாம். வேறு ஒருவர் வந்து நமக்கு உதவி செய்யாதவரையில் நாம் இந்நிலையிலிருந்து தப்ப முடியாதென நினைக்கவும் வேண்டாம்.
நாம் பட்டுப்பூச்சியைப்போல் இருக்கிறோம். பட்டுப்பூச்சி தன் உடலிலிருந்து உண்டாகும் பசையால் கூட்டைக் கட்டித் தன்னை அதற்குள் சிறை செய்துகொள்வது போல், நாம் செய்த காரியத்தின் பயனாகவும் பழக்கத்தின் பயனாகவுமே நம்மை நாம் பந்தப்படுத்திக்கொள்கிறோம். அதற்குப்பிறகு நம் அறியாமையின் காரணமாக, நாம் கட்டப்பட்டு இருப்பதாக நினைத்து அழுகிறோம்; உதவிக்காகக் கூக்குரலிடுகிறோம். ஆனால், எப்பொழுதும் வெளியிலிருந்து நமக்கு உதவி வருவதே இல்லை. நம்முள் இருந்துதான் நமக்கு உதவி வருகிறது. உலகிலுள்ள எல்லா தெய்வங்களிடமும் சென்று முறையிட்டுப் பாருங்கள்! நான் பல வருஷங்கள் இவ்விதம் புலம்பியிருக்கிறேன். கடைசியில் எனக்கு உதவி கிடைத்தது. ஆனால், இவ்வுதவி என் உள்ளத்தினின்றுதான் வந்தது. நான் தவறாக வேய்ந்துகொண்ட என் கட்டுக்களை நானேதான் அறுத்து, அவற்றினின்றும் என்னை விடுவித்துக் கொள்ளவேண்டியிருந்தது. என்னுடைய வாழ்க்கையில் பல தவறுகளை நான் செய்திருக்கிறேன். அத்தவறுகளைச் செய்யாமல் நான் எனது இன்றைய நிலைமையை அடைந்திருக்க முடியாது. நீங்கள் வீட்டுக்குச் சென்று வேண்டுமென்றே தவறுகளைச் செய்யவேண்டுமென்று நான் சொல்லுவதாக நீங்கள் அர்த்தம் செய்துகொள்ளக் கூடாது. அவ்விதமாக என்னைத் தப்பர்த்தம் செய்துகொள்ள வேண்டாம். சென்றதைக் குறித்து வருந்தி மனச்சோர்வடைய வேண்டாமென்பதே நான் அறிவுறுத்துவது.
தவறுகளுக்குக் காரணம் பலவீனம்
நாம் பல தவறுகள் செய்கின்றோம்; அவற்றுக்குக் காரணம் நமது பலவீனம். பலவீனத்துக்குக் காரணம் – நம் அறியாமையேயாகும். நம்மை யார் அறியாதவர்களாகச் செய்கிறார்கள்? நாமே நம் கண்களை நம் கைகளாலேயே மூடிக் கொண்டு இருட்டாயிருக்கிற தென்று முறையிடுகின்றோம். மூடியிருக்கும் கையை எடுத்துவிடுங்கள்; உடனே வெளிச்சம் தோன்றும். மனித ஆன்மாவின் சுயம்பிரகாச சக்தியாகிய ஒளி நம்மை எப்பொழுதும் சூழ்ந்திருக்கிறது. தற்கால நூல்களைப் படித்த அறிவாளிகள் என்ன சொல்லுகிறார்கள் என்று நீங்கள் கேட்டதில்லையா? உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் காரணம் என்ன? விருப்பமே பரிணாமத்தின் அடிப்படையான காரணம் [Evolution] என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு விலங்கு ஒரு காரியத்தைச் செய்ய விரும்புகிறது. ஆனால், அதன் சுற்றுச் சார்புகள் அதற்கு ஏற்றவையாயிருப்பதில்லை. எனவே, அதன் சுற்றுச் சார்புக்கேற்ற ஓர் உடம்பை அது உண்டாக்கிக் கொள்கிறது. யார் அவ்வுடம்பை உண்டாக்குகிறார்கள்? அப்பிராணியே தான்; அதன் மனவலிமை அதை உண்டாக்குகிறது. உங்கள் மனவலிமையைப் பயன்படுத்துங்கள்; அது உங்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டுபோகும். மனம் சர்வ சக்தி வாய்ந்ததாக இருந்தால், நாம் ஏன் சர்வ சக்தி வாய்ந்தவர்களாயில்லை?’ என்று நீங்கள் கேட்கலாம்.
சீரிய ஒழுக்கமே தேவை
இக்கேள்வி கேட்கும்போது, நீங்கள் உங்கள் சிறு அகங்காரத்தை மட்டிலுமே நினைக்கிறீர்கள். ஒரு பரமாணுவிலிருந்து ஓர் உயர்ந்த மனிதனாக நீங்கள் வளர்ந்ததைத் திரும்பிப் பாருங்கள். இதையெல்லாம் செய்தது யார்? உங்கள் மனவலிமைதான். இவ்வளவு உயர்வாக வளரச்செய்த உங்கள் மனவலிமை உங்களை இன்னும் உயரக் கொண்டுபோகும்; உங்களுக்கு வேண்டியதெல்லாம் வாழ்க்கையில் உயர்ந்த ஒழுக்கமும், மனவலிமையும் தான்.
நீங்கள் உங்கள் வீட்டுக்குச் சென்று தலைக்கு முக்காடிட்டு நீங்கள் செய்த தவறுகளுக்காக ஆயுட்காலம் முழுவதும் அழுதாலும், அது உங்களுக்கு உதவாது. அது உங்களை இன்னும் அதிகமாகப் பலவீனப்படுத்தும். இதுவரையிலும் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக துயரங்கள் நிறைந்திருந்தால் நீங்கள் வந்து அழுதவுடனே அத்துயரங்கள் நீங்குமா? தீக்குச்சியை உரைத்த அளவிலே வெளிச்சம் தோன்றுகிறது. அதைப்போலவே, நான் கெட்ட செய்கைகள் செய்திருக்கிறேன், தவறுகள் செய்திருக்கிறேன்’ என்று வாழ்க்கை முழுவதும் அழுது புலம்பினாலும் யாது பயன்? நாம் செய்த குற்றங்களை நமக்குச் சொல்ல எந்தச் சாமியோ பூதமோ தேவையில்லை. வெளிச்சத்தைக் கொண்டு வந்தால், இருள் உடனே மறையும். உயர்ந்த ஒழுக்கத்தைக் கடைபிடித்து உங்களுக்குள் மறைந்திருக்கும் உள்ளொளியான சச்சிதானந்தப் பரம்பொருளை வெளிப்படுத்துங்கள்; மற்றவர்களும் அதை வெளிப்படுத்தும்படி உதவுங்கள். அதுவே நமக்கு இப்போது தேவையானது.