
சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள்,கட்டுரைகள், கடிதங்கள் இவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது.
உண்மையான ஆசிரியரின் பண்பு
ஆசிரியர் ஒளி பரப்புகிறவர் :
ஊழியர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களை – கவானிடம் தம்மை ஒப்படைத்து விட்ட மனிதர்கள் அதிகமான ப.ரியங்களைச் செய்கிறார்கள். பிறருக்கு உபதேசம் பண்ணுகிறவர்களின் ஒருபெரும் படையைவிடத் தன்னைத் தானே பரிபூரணமாகத் தூய்மைப் படுத்திக் கொண்ட ஒரு மனிதன் அதிகமான சானைகளைச் சாதிக்கிறான். தூய்மை, மௌனம் இவற்றிலிருந்தே ஆற்றல் பிறக்கிறது.
ஆசிரியரின் தனிச் சிறப்பு :
ஒரு நண்பர் இங்கிலாந்தில் ஒரு தடவை என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். “நாம் ஆசிரியருடைய தனிப்பட்ட வாழ்வின் தகுதியை எதற்காக நோக்க வேண்டும்? அவர் கூறுவதைச் சீர் தூக்கிப்பார்த்து, அதை ஏற்க வேண்டியதுதானே நம் வேலை?” என்று வினவினார். அது அப்படியல்ல. ஒருவர் எனக்குச் சிறிது கதிசாஸ்திரத்தையோ (டைனமிக்ஸ்) ரசாயன சாஸ்திரத்தையோ அல்லது பௌதிக விஞ்ஞானத்தில் ஏதாவதொரு பகுதியையோ கற்பிக்க விரும்பினால் அவருடைய ஒழுக்கப் பண்பு எப்படியாவது இருக்கலாம். எப்படி இருந்தாலும் அந்நிலையில் கூட கதிசாஸ்திரத்தை அல்லது வேறொரு விஞ்ஞானக்கலையை எனக்குக் கற்பிக்க அவரால் முடியும். ஏனெனில் பௌதிக விஞ்ஞான சாஸ்திரங்களுக்குத் தேவையான அறிவு வெறும் புத்தியையே சார்ந்ததாகும். அது மனிதனுடைய புத்தி சக்தியைப் பொறுத்தாகும். அந்தக் கலையில் ஒரு மனிதனுக்கு அபாரமான அறிவு ஆற்றல் இருந்தும், அவனது ஆத்மா சிறிதளவு கூட வளர்ச்சியடையாமல் இருக்க முடியும். ஆனால் ஆத்மீக சாஸ்திரங்களைப் பொறுத்தவரை எந்தக் கட்டத்திலாயினும் சரி, ஆரம்ப நிலை முதல் முடிவு நிலை வரை, தூய்மையற்ற ஓர் ஆத்மாவிடம் எந்தவிதமான ஆத்மிக ஒளியும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஆத்மாவினால் என்ன கற்பிக்க முடியும்? அதற்கு ஒன்றுமே தெரியாது. ஆத்மிக சக்தி என்பது தூய்மைதான்.
சமயத்தைப் போதிக்கிற ஆசிரியர் எப்படிப்பட்டவர் என்பதை முதன் முதலாக நாம் கவனிக்க வேண்டும். பிறகு தான் அவருடைய சொல்லுக்கு மதிப்பு ஏற்படுகிறது. ஏனெனில் அவர் சக்தியைப் பரப்புகிறவர் ஆவார். அவரிடம் ஆத்மிக சக்தி இராவிட்டால் அவர் எதைத் தான் பரப்ப முடியும்? ஓர் உதாரணம்: வெப்பம் தருகிற வெப்பத் தகடு (ஹீட்டர்) சூடுள்ளதாக இருந்தால், உஷ்ண அலைகளை அதனால் பரப்ப முடியும். அப்படிச் சூடாக இல்லாவிட்டால், அதனால் சூடு பரப்ப முடியவே முடியாது. சமய போதகர் நிலையும் அப்படியேதான். சமய போதகர் தனது மன அலைகளை மாணவனின் மனத்துக்கு அனுப்புகிறார். வெறுமனே மூளைச் சக்திகளைத் தூண்டிவிடுவதல்ல அவர் வேலை. தம்மிடமிருக்கும் சக்தியைப் பாய்ச்சி மாற்றிக் கொடுப்பதுதான் ஆசிரியர் வேலை. உண்மையான புலனுக்குத் தெரிகிற ஒரு சக்தி ஆசிரியரிடமிருந்து வெளிப்பட்டு மாணவனை அடைந்து அங்கே அவனது மனத்தில் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. ஆகவே ஆசிரியர் உண்மையானவராக இருக்க வேண்டும் என்பது அவசியமான நிபந்தனையாகும்.
சில சமயங்களில் மிக அழகான சொற்பொழிவுகளை நாம் கேட்கிறோம். மிக அற்புதமான தர்க்க வாதங்களுடன் உபந்நியாசம் செய்வதைக் கேட்கிறோம். வீட்டுக்குப் போகிறோம். எல்லாம் மறந்து போகிறது. வேறு சில சமயங்களில் நாம் ஒரு சில வார்த்தைகளையே, மிகச் சாதாரணமான சொல்லமைப்புடன் கேட்கிறோம். அவை நமது வாழ்வினுள் புகுந்துவிடுகின்றன. நமது உடலில் பிரிக்க முடியாத அங்கமாக ஆகி விடுகின்றன. நிரந்தரமான விளைவுகளை உண்டாக்குகின்றன. தான் கூறும் சொற்களில் தனது ஆத்ம சக்தியைப் புகுத்த முடிகிற மனிதனின் வார்த்தைகளுக்குப் பலன் ஏற்படுகிறது. ஆனால் அம்மனிதனுக்கு அபாரமான தனித்துவச் சக்தி இருக்க வேண்டும். எல்லாப் போதனைகளிலும் கொடுக்கல், வாங்கல் பொதிந்து உள்ளது. ஆசிரியர் கொடுக்கிறார்; மாணவன் வாங்குகிறான். ஆனால் ஒருவரிடம் கொடுப்பதற்கு ஏதாவது இருக்க வேண்டும்; வாங்கிக் கொள்கிறவனும் பெறுவதற்கு ஆயத்தமாகத் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும்.
ஆசிரியருடைய வேலைப் பொறுப்பு :
(1) மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்தை வெளிப்படுத்துவதே கல்வி எனப்படும்.
(2) மனிதனுக்குள் புதைந்திருக்கும் தெய்விகத் தன்மையை வெளிப்படுத்துவதே சமயம் எனப்படும்.
ஆகவே இந்த இரண்டு விஷயங்களிலும் ஆசிரியர் செய்ய வேண்டிய ஒரே கடமை, மாணவனின் பாதையிலுள்ள எல்லாத் தடைக் குறுக்கீடுகளையும் அகற்றுவதேயாகும். நான் எப்பொழுதும் கூறுவது போல, தடைகளை அகற்றிய பின்னர் மனிதனின் மீது கை வைக்க வேண்டாம். எல்லாம் சரியாகப் போய் விடும். பாதையைத் தங்கு தடையில்லாததாக்குவதே நமது கடமை. இறைவன் மீதியிருப்பதைச் செய்து கொள்வான்.
எதிர்மறை எண்ணங்கள் மனிதனைப் பலவீனப் படுத்துகின்றன :
எதிர்மறை எண்ணங்கள் மனிதனைப் பலவீனப்படுத்துகின்றன. சில பெற்றோர்கள் எப்பொழுது பார்த்தாலும் தமது பிள்ளைகளைப் படிக்கும்படியும், எழுதும்படியும் வற்புறுத்துவார்கள்: “உனக்குப் படிப்பே வராது, நீ முட்டாள்” என்று பலவாறாகத் திட்டுவார்கள். அதேபோல் எத்தனையோ பையன்கள் முட்டாள்களாகவே மாறிவிடுகிறதை நீங்கள் கண்டதில்லையா? பையன்களிடம் அன்பாகப் பேசி அவர்களை உற்சாகப்படுத்தினால் நாளடைவில் அவர்கள் முன்னேறுவது திண்ணம். சிறுவர்களுக்கு எது நல்லதாகப் பொருந்துகிறதோ அதுவே உயர்ந்த தத்துவச் சிந்தனைத் துறையில் சிறுவர்களாக இருப்பவர்களுக்கும் பொருத்தமாகும். அவர்களுக்கு ஆக்கக் கருத்துக்களை அளித்து வந்தால் ஆண்மையுள்ளவர்களாக அவர்கள் வளர்ந்து தம்மையே நம்பி வாழக் கற்றுக் கொள்வார்கள். மொழி, இலக்கியம், கவிதை, கலை ஆகிய எல்லாவற்றிலுமே ஈடுபட்டுள்ள மனிதர்களின் சிந்தனையிலும் செயலிலும் உள்ள தவற்றை நாம் சுட்டிக்காட்டக் கூடாது. அந்தந்தக் காரியங்களை எவ்வழியில் செய்தால் இப்பொழுதுள்ளதைவிட நல்ல முறையில் செய்து முடிக்க முடியும் என்பதையே சுட்டிக் காட்டவேண்டும். குறைகளைச் சுட்டிக் காட்டுவது ஒரு மனிதனுடைய உணர்ச்சிகளைப் புண்படுத்துகிறது. நாங்கள் உபயோகமற்ற உதவாக்கரையென்று கருதியவர்களைக் கூட ஸ்ரீ ராமகிருஷ்ணர், உற்சாகப்படுத்தி அதன் மூலம் அவர்களது வாழ்வின் பாதையையே திருப்பிவிட்ட முறையைக் கண்டி ருக்கிறோம். அவர் போதனை செய்கிற முறையே அலாதியானது, அற்புதமானது.