4. வைசியர்களின் ஆதாயம் கருதும் செயல்களின் குணங்கள் யாவை?
பிராமண, க்ஷத்திரிய சக்திகள் ஓங்கியிருந்தபோது கல்வியும், நாகரீகமும் ஓர் இடத்தில் குவிந்திருந்தது போல், வைசிய சக்தியின் ஆதிக்கத்தில் செல்வம் ஓரிடத்தில் குவிகிறது. கிளிங் என்ற அதன் மதுர ஒலி நான்கு ஜாதியினரின் மனத்திலும் ஒரு தடுக்க முடியாத கவர்ச்சியை ஏற்படுத்துகிறது, அந்தக் காசுதான் வைசியனின் சக்தி. இதனைப் பிராமணன் தந்திரத்தால் பிடுங்கிக் கொள்வான், க்ஷத்திரியன் படைபலத்தால் பறித்துவிடுவான் என்று வைசியன் பயந்துகொண்டே இருக்கிறான். ஆகவே தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வைசியர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். வைசியனின் கையிலுள்ள வட்டி யாகிய சாட்டை எல்லோரது உள்ளத்தையும் நடுங்கச் செய்கிறது. பணபலத்தால் அரச பலத்தை ஒடுக்குவதில் அவன் எப்போதும் மும்முரமாக இருக்கிறான். தனக்குப் பணமும் பொருளும் வந்து சேர்வதில் அரச சக்தி குறுக்கிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறான். இருந்தும் அந்த அரச சக்தி சூத்திரர் களிடம் போவதில் அவனுக்குச் சிறிதும் விருப்பமில்லை .
வைசியன் சொன்னான்: ‘பைத்தியக்காரர்களே, எங்கும் நிறைந்த கடவுள் என்று நீங்கள் சொல்கிறீர் களே, அது என் கையில் உள்ளதும் சர்வ வல்லமை யுள்ளதுமான பணம். அதன் அருளால் நானும் வல்லவ னாகி விட்டேன். ஏ பிராமணா, இதன் தயவால் நான் உன் தவம், ஜபம், கல்வி, அறிவு அனைத்தையும் இப் போதே வாங்கிவிட முடியும். ஏ மன்னா, இந்த என் பணத்தின் பேராற்றல் உன் ஆயுதங்கள் அனைத்தையும், உன் வீரதீரம் எல்லாவற்றையும் என் கட்டளைப்படிச் செய்ய வைக்கும். இதோ உயர்ந்த, பரந்த தொழிற்சாலைகளைப் பார்க்கிறாயே அவை என்னுடைய தேன்கூடுகள். எண்ணற்ற சூத்திரர்கள் என்னும் தேனீக்கள் அந்தக் கூடுகளில் இடைவிடாமல் எப்படித் தேனைச் சேகரிக்கிறார்கள், பார்த்தாயா? ஆனால் அந்தத் தேனைக் குடிப்பது யார் தெரியுமா? நான்தான். காலப்போக்கில் ஒரு துளித் தேனைக்கூட விடாமல் என் சொந்த லாபத்திற்காக, அனைத்தையும் வடித்தெடுப்பேன்.’