
சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள்,கட்டுரைகள், கடிதங்கள் இவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது.
தலைமை தாங்கும் திறமை
ஒழுக்கத்தின் தூய்மை :
ஒரு தலைவனிடம் ஒழுக்கமில்லாவிட்டால் அவனிடம் மக்களுக்கு பக்தி ஏற்பட முடியாது. அவனிடம் மாசுமறுவற்ற தூய்மை இருக்குமாயின் மக்களுக்கு அவனிடம் நிரந்தரமான பக்தியும் நம்பிக்கையும் நிச்சயமாக இருக்கும்.
மக்களை இணைத்து வழி நடத்துகிற பிறவிக்குணம் :
ஒரு வாழ்வில் ஒருவன் தலைவனாக ஆக்கப்படுவதில்லை. அதற்காகவே அவன் பிறவியெடுக்க வேண்டும். ஏனென்றால் ஒரு தலைவனுக்குத் தோன்றக்கூடிய பிரச்னை இயக்கத்தை அமைப்பதோ, திட்டங்கள் போடுவதோ அல்ல. பலவாறாகப் பிரிந்து வேறுபட்ட தன்மைகளுள்ள மக்களை, அவர்களனைவருக்கும் பொதுவான அநுதாப உணர்ச்சிகளை ஒட்டிய பாதையில் ஒன்றாக் இணைத்து இட்டுச் செல்வதுதான் ஒரு தலைவனுக்கு வரக்கூடிய பரீட்சை; உண்மையான சோதனையாகும். இந்தக் காரியத்தை அவன் தன்னையறியாமலேயே, சகஜமாகவே செய்ய வேண்டும். முயற்சி செய்து ஒருக்காலும் செய்ய முடியாது.
தொண்டும், அன்பும் தலைமை தாங்குவதற்கு முதற்தேவைகள்:
தலைமை தாங்குகிற பாத்திரத்தை, பொறுப்பை ஏற்றுக் கொள்வது மிக மிகக் கஷ்டமான காரியமாகும். தலைமை தாங்குகிறவன் அடியார்க்கடியானாக (தாஸஸ்ய தாஸ:) இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான உள்ளங்களுக்குத் தன் உள்ளத்தில் அவன் இடந்தரவேண்டும். தினையளவேனும் பொறாமையோ, சுயநலமோ அவனுக்கு இருக்கக்கூடாது. அப்பொழுதுதான் அவனால் தலைவனாக ஆக முடியும். முதலாவதாகப் பிறவியின் மூலமும் பின் சுயநலமற்றிருப்பதன் மூலமாகவும் தலைவன் தோன்றுகிறான்.
படைத் தலைவனின் தீரம் என்றால் அது ஆணவ அகம்பாவமல்ல; ஆத்மத் தியாகமாகும் :
– … ஒருவன் எவ்வாறு தொண்டாற்ற வேண்டும்? எப்படிப் புலன்களை அடக்க வேண்டும்? அவற்றை ஒரு மனிதன் ஆரம்ப நிலையிலே தெரிந்து கொள்ள வேண்டும். அவனை அப்படித் தெரிந்து கொள்வதற்குத் தூண்டுவது படைவீரனின் அஞ்சா நெஞ்சம்தான். அது எங்கே இருக்கிறது? இந்த அஞ்சா நெஞ்சமென்பது ஆணவ அகம்பாவ உணர்ச்சியல்ல. அது ஆத்மத் தியாக உணர்ச்சியாகும். ஒரு மனிதன் மற்றவர்களது உள்ளங்களையும் வாழ்க்கையையும் கட்டியாண்டு, அவர்களுக்குக் கட்டளையிட்டு வழி காட்டுவதற்கு முன்னால் அவன் தனக்கு வரக்கூடிய கட்டளைச் சொல்லைக் கேட்ட வினாடியே முன்னேறிச் செல்லவும், தன் உயிரை அர்ப்பணிக்கவும் ஆயத்தமாக இருந்தே தீர வேண்டும். முதன் முதலில் ஒருவன் தன்னைத் தானே அர்ப்பணித்துத் தியாகம் செய்ய வேண்டும்.
எதிர்ப்பின் கடுமைத் தாக்குதலைத் தலைவன் தான் தாங்க வேண்டும் ;
பாரதப் படை வீரன் போர்க்களத்தில் கோழைத்தனத்தை வெளிகாட்டுகிற ரீதியிலா நடந்து கொள்கிறான்? கிடையாது. ஆனால் அவர்களுக்குத் தக்க தலைவர்கள் கண்டிப்பாகக் கிடைக்க வேண்டும். ஜெனரல் ஸ்ட்ராங் என்ற என் ஆங்கில நண்பர் சிப்பாய்க் கலகம் என்ற சுதந்திரப் போரின்போது பாரதத்திலிருந்தார். அந்நிகழ்ச்சிகளைப் பற்றி பல கதைகளை எனக்குக் கூறுவார். ஒரு நாள் பேச்சு வாக்கில் அவரிடம் “சிப்பாய்களிடம் போதுமான அளவில் துப்பாக்கிகளும் ரவைகளும் உணவுப் பொருள்களும் கைவசமிருந்தும், யுத்த அனுபவத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக அவர்கள் இருந்தும் கூட ஏன் தோற்றுப் போனார்கள்?” என்று வினவினேன். அவர் அதற்குப் பதிலளிக்கையில், “சிப்பாய்களின் தலைவர்கள் முதலில் தாங்கள் முன்னேறிச் சென்று போரிடுவதற்குப் பதிலாகப் பின்னணியில் பத்திரமான இடத்தில் இருந்து கொண்டு “வீரச் சிறுவர்களே! போரிடுங்கள். போரிடுங்கள்” என்று கூச்சல் மட்டும் போட்டு வந்தார்கள்” என்று கூறினார். எனவே படைத்தலைவன் முதலில் முன் சென்று மரணத்தை எதிர் கொண்டழைத்தாலன்றிக் கீழதிகாரிகளும், படைவீரர்களும் முழுமனதுடன் போரிட மாட்டார்கள். எல்லாத் துறைகளிலும் நிலைமை இவ்வாறுதான் உள்ளது. “தலைவனாக இருப்பவன் தனது தலையை அர்ப்பணம் செய்ய உன்னால் முடிந்தால் அப்பொழுதுதான் நீ தலைவனாக ஆகமுடியும். தேவைப்படுகிற தியாகத்தைச் செய்யாமலே நாமெல்லோரும் தலைவராக ஆக விரும்புகிறோம். அதனால் நாம் செய்கிற காரியங்களெல்லாம் பலனளிக்காமல் சுழியாகின்றன. நம்முடைய சொல்லுக்கு எவருமே செவி சாய்ப்பதில்லை.
தலைவன் பாரபடசமற்றவனாகவும் தனிச் சார்பு அற்றவனாகவும் இருக்க வேண்டும் :
தீமைகளுக்கு முக்கியமான காரணம் ஓர வஞ்சனை காட்டுவதேயாகும். எல்லோரிடமும் காட்டுகிற அன்பைவிட ஓரிருவரிடம் அதிகமாக அன்புகாட்டினால், வருங்காலத்தில் தொல்லைகளுக்கான விதைகளை விதைத்து விட்டீர்கள் என்பதை நிச்சயமாக நம்புங்கள்.
உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பிரித்து வைத்து அதற்கு ஏற்றபடி அன்பு காட்டுகிறவன் ஒருநாளும் தலைவனாக ஆக முடியாது. எவருடைய அன்புக்கு முடிவில்லையோ, உயர்வு தாழ்வுகளைப் பற்றிச் சிந்திக்க எவர் ஒரு போதும் முனைவதில்லையோ, அவரது கால்களில் கீழ் உலகம் முழுவதும் வந்து வீழ்ந்து கிடக்கும்.
பல பேர் அநேகமாகத் தமது அன்பு முழுவதையும் என்மீது சொரிவதை நான் காண்கிறேன். ஆனால் அதற்குப் பதிலாக நான் எனது முழு அன்பையும் ஒரு தனி மனிதனுக்கும் அளித்துவிடக் கூடாது. ஏனெனில் அப்படிச் செய்யும் அதே நாளில் எனது பணி முழுவதும் படுநாசமாகி விடும். தனி மனிதச் சார்பில்லாத எனது நோக்கை, எனது பார்வையைப் புரிந்து கொள்ளாத சிலர் அவர்கள் தமது முழு அன்பையும் அளித்ததற்குப் பதிலாக நானும் அளிப்பேன் என்று எதிர்பார்க்கலாம். முடிகிற அளவுக்கு அதிகமான பேர்களுடைய உற்சாகம் நிறைந்த அன்பு எனக்குக் கிடைக்க வேண்டும். இந்த வேலையைச் செய்வதற்கு அது அத்தியாவசியமாகும். அதே நேரத்தில் நான் முற்றிலும் தனிச்சார்பு அற்று வாழ வேண்டும். இல்லையேல் பொறாமையும், பூசலும், வேலை எல்லாவற்றையும் குலைத்து அழித்துவிடும். ஒரு தலைவன் எப்பொழுதும் தனிச் சார்பு அற்றவனாகவே இருந்து தீர வேண்டும்.
அனுதாபத்தாலும் சகிப்புத் தன்மையாலும் தலைவன் மக்களைக் கூட்டி இணைத்து மாற்றி உருவாக்க வேண்டும்:
தனது மற்ற சகோதரர்களைப் பற்றி அவதூறு பேச யாராவது உன்னிடம் வந்தால் அந்தப் பேச்சைக் கேட்க அடியோடு மறுத்து விடு. அதைக் கேட்பதுகூட பாபம். வருங்காலத் தொல்லைகளுக்கான விதை அதில் அடங்கியுள்ளது.
அத்துடன் எல்லோருடைய குற்றங் குறைகளையும் சகித்துக் கொள். லட்சக்கணக்கில் ஒருவன் குற்றம் புரிந்தாலும் அவற்றை மன்னித்துவிடு. சுயநலமின்றி நீ எல்லோரையும் நேசிப்பாயானால், மெல்ல மெல்ல அவர்கள் ஒவ்வொருவரும் பரஸ்பரம் நேசித்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள்; பிறருடைய நலனை ஒட்டிச் சார்ந்துதான் தம்முடைய நலனும் உள்ளது என்று அவர்களுக்குப் பூரணமாகப் புரியும் பொழுது அவர்களில் ஒவ்வொருவரும் பொறாமையைக் கைவிட்டு விடுவார்கள். ஏதாவதொரு காரியத்தை ஒருமிக்க, ஏகமனதாகச் செய்வது என்பது நமது தேசியப் பண்பிலேயே இன்று கிடையாது. ஆகவே அந்த உணர்ச்சியை மிகுந்த ஜாக்கிரதையுடன் நீங்கள் துவங்கி வைத்து விட்டுப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.
‘குழந்தையைப் போல்’ வழி நடத்துபவனே தலைசிறந்த தலைவனாவான் :
பிறருடைய தலைமையின் கீழ் வேலை செய்யும்போது சிலர் மிகச் சிறப்பாக வேலை செய்கிறார்கள். ஒவ்வொருவருமே தலைமை தாங்குவதற்காகப் பிறக்கவில்லை. இருப்பினும் குழந்தையைப் போலத் தலைமை தாங்கிச் செல்லுகிறவன்தான் உயர்ந்த தலைவனாவான். குழந்தை வெளிப்பார்வைக்கு ஒவ்வொருவரையும் சார்ந்து, நம்பி வாழ்ந்தாலும் அது குடும்பத்தில் ராஜாவாக விளங்குகிறது. குறைந்த பட்சம், என்னுடைய சிந்தனைப்படி அதுவே தான் தலைமையின் ரகசியம்.
தான் தலைமை தாங்குவதாக ஒருவன் சற்றேனும் விளம்பரப் படுத்திக் கொண்டால் அது பிறர் மனதில் பொறாமையை மூட்டி எல்லாவற்றையும் நாசமாக்கி விடுகிறது.